உணவுப் பொருள் பணவீக்கம் 11.49% ஆக உயர்வு

வியாழன், 24 பிப்ரவரி 2011 (14:27 IST)
பால், முட்டை, ஆட்டுக் கறி, காய்கறிகள் ஆகியவற்றின் விலை உயர்ந்ததன் காரணமாக பிப்ரவரி 12ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 0.44 விழுக்காடு அதிகரித்து 11.49 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இதே வாரத்தில் கடந்த ஆண்டு உணவுப் பொருள் பணவீக்கம் 21.82 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் புள்ளி விவரத் துறை இன்று வெளியிட்ட மொத்த விலைக் குறியீட்டின் படி, முட்டை, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றின் விலை, பிப்ரவரி 5க்கும் 12க்கும் இடைப்பட்ட ஒரு வார காலத்தில் 14.79 விழுக்காடு உயர்ந்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வாரத்தில் பால் விலை 17 விழுக்காடும், காய்கறிகள் விலை 15.89 விழுக்காடும் உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு விலை 9.72 விழுக்காடும், பருப்பு வகைகள், கோதுமை ஆகியவற்றின் விலை முறையே 1.01, 5 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் அரசு விவரம் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்