அந்நிய நேரடி முதலீட்டில் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் மத்திய அரசு கவலை

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (17:49 IST)
FILE
சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்து 9 மாதங்கள் ஆகியும், எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் மத்திய அரசு சில விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்துள்ளது.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சில்லறை வணிகத்தில் 49% அந்நிய முதலீட்டை ஈர்க்க அனுமதி அளிக்கப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்துள்ளது. ஆனால் இதுவரை ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இந்தியாவில் கடைகளை திறக்க முன்வரவில்லை. எதிர்பார்த்த முதலீடு வராததால் கவலை அடைந்துள்ள மத்திய அரசு விதிமுறைகளை மென்மைப்படுத்த முன் வந்துள்ளது.

குறிப்பாக உள் கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கான அனுமதியை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் விவகாரத்தில் விதிமுறைகளை தளர்த்த இன்று நடைபெற இருக்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் மக்கள்தொகைக்கு குறைவான சிறுநகரங்கள் கொண்டு வருவது பற்றியும் விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது. இந்த விஷயத்தில் குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகத்தின் ஆட்சேபத்தையும் புறம் தள்ளி இந்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கானா பற்றி விவாதிக்கப்படாது எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்