கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு

வெள்ளி, 26 ஜூன் 2009 (17:15 IST)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 37 பாடப் பிரிவுகளுக்கு 1,195 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணியை, ஆசிரியை தேர்வு வாரியம் மேற்கொண்டது.

விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 30,259 பேருக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது. இதன் முடிவில் 5,930 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். ஜூன் 8 முதல் 12ஆம் தேதி வரை நடந்த நேர்முகத் தேர்வில் 5,638 பேர் பங்கேற்றனர்.

இதன் முடிவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், மைரோ பயாலஜி, தெலுங்கு, ஹிந்தி ஆகிய 7 பாடங்களுக்கான தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் இணையதளத்தில் (trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.

அந்தத் தகவலில் தமிழ் பாடத்திற்கு 92 பேரும், ஆங்கிலத்திற்கு 181 பேரும், கணித பாடத்திற்கு 101 பேரும், இயற்பியலுக்கு 121 பேரும், மைரோ பயாலஜிக்கு ஒருவரும், தெலுங்கு பாடத்திற்கு 4 பேரும், ஹிந்திக்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்