மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
புதன், 1 ஜூலை 2009 (11:34 IST)
சுற்றுப்புழச் சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு படிப்படியாக தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று காலையில் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்ரமணியன், சென்னையை அழகுபடுத்தும் விதத்தில் மெரினா கடற்கரையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இருக்கிறோம். நவீன கழிவறைகளையும் அங்கே நாங்கள் அமைத்து வருகிறோம் என்றார்.