பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்: சென்னையில் 18ஆம் தேதி நடக்கிறது

செவ்வாய், 14 ஜூலை 2009 (12:10 IST)
சென்னையில் வரும் 18ஆம் தேதி பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து மகளிருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளியில் வரும் 18ஆம் தேதி இம்முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை நடக்கும் இந்த முகாமில் பிரபல செல்போன் நிறுவனத்திற்காக ‘ஆபரேட்டர் பயிற்சி’ பணிக்கு, பிளஸ்-2 தேர்வில் 60% மதிப்பெண் பெற்றுவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில், 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். மாதச் சம்பளம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

இதேபோல் தொழிற்பயிற்சி பணியில் உள்ள காலியிடங்களுக்கு பிளஸ்-2 தேர்வில் தொழில்பிரிவில் 2007, 2008, 2009ஆம் ஆண்டுகளில் படித்த 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.3,250 வழங்கப்படும்.

இந்த பணிகளுக்கு இலவச போக்குவரத்து, மருத்துவ வசதி மற்றும் இலவச சிற்றுண்டி வசதி ஆகியவை உண்டு. வேலைவாய்ப்பற்ற மகளிருக்காக இம்முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது. இதில், கலந்து கொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. மேலே குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் பிற தகுதியுள்ளவர்கள் மட்டும் இதில் கலந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்