தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு இலவச தொழில் பயிற்சி

செவ்வாய், 23 ஜூன் 2009 (18:17 IST)
10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சிப் பெற்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவ, மாணவியருக்கு மத்திய அரசு இலவச வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சியை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இலவச வேலைவாய்ப்பு மற்றும் தொழிற் பயிற்சி மையம் இரு பயிற்சித்திட்டங்களை நடத்தவுள்ளது.

ஒரு பயிற்சி திட்டமானது 11 மாதங்கள் கொண்ட சிறப்பு பயிற்சியாகும். இது கம்ப்யூட்டர், டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, பொது ஆங்கிலம், பொது விழிப்புணர்வு மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கான பயிற்சியாகும். 11 மாத கால பயிற்சித் திட்டத்திற்கு பயிற்சிக் கால ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும். இத்திட்டத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி.

மற்றொரு பயிற்சி திட்டமானது கம்ப்யூட்டரில் 'ஓ' நிலை கல்வியாகும். 30 வயதுக்குட்டப்பட்ட 12ம் வகுப்பு மற்றும் அதற்கு கூடுதலான கல்வித் தகுதி உடையவர்கள் தங்களுடைய ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவானதாக இருந்தால் அவர்கள் சார் பிராந்திய வேலை வாய்ப்பு அலுவலர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இனத்தவருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம், எண் - 56 சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-4 (மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகம்) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்