4-ல் கூட்டுறவு வங்கித் தேர்வு முடிவு!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (10:55 IST)
கூட்டுறவு வங்கிப் பணியாளர் தேர்வு முடிவுகள் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் கோ.சி. மணி வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில் 18 வங்கிகளில் காலியாக உள்ள 514 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 18 வங்கிகளின் பட்டியல் பெறப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக கடந்த 24 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 3 வழங்குகளும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 6 வழக்குகளும் உள்ளன. வழக்கு தொடர்பான வங்கித் தேர்வுகளை தவிர்த்து, 16 வங்கிகளுக்கும், வரும் 4 ஆம் தேதி தேர்வுத்தாள் மதிப்பீடு முடித்து, அன்றே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்