கணினி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு!

புதன், 1 அக்டோபர் 2008 (16:53 IST)
வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த கணினி ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிகிறது.

அரசு பள்ளிகளில் பணி புரிந்து வரும் 1,800 கணினி ஆசிரியர்களை சிறப்புத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 12 ஆம் தேதி கணினி ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டது.

இதற்காக ஆசிரியர்களின் பெயர் பட்டியல் சரிபார்க்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இது இன்னும் நிறைவடையாததால், ஆசிரியர் பட்டியல் தயார் செய்து தேர்வுத் வாரியத்திடம் ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வரும் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறாது என்று கூறப்படுகிறது. அனேகமாக இம்மாத இறுதியில் இத்தேர்வு நடத்தப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்