பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிவ சேனா எம்.பி மீது புகார்

திங்கள், 17 மார்ச் 2014 (18:01 IST)
பிரபல நடிகை நவ்னீத் கவுர் ரானாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை தகாத வார்த்தைகளில் அவதூறாக பேசியதாகவும் சிவ சேனா எம்.பி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
FILE

நவ்னீத் கவுர் ரானாவை தவறான முறையில் பேசியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் சிவ சேனா எம்.பி அனந்த்ராவ் அட்சூல் மற்றும் மேலும் இருவர் மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.

நவ்னீத் கவுர் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கபட்டு உள்ளார். 27 வயதாகும் இவர் அம்பா சமுத்திரம் அம்பானி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

FILE
நவ்னீத் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிடும் சிவ சேனா எம்.பி ஆனந்த்ராவ் அட்சூல் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தகாத முறையில் பேசியதாகவும் கூறி புகார் அளித்துள்ளார்.

இது குறித்து நவ்னீத் கூறும்போது, தவறான முறையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல், சாதி மற்றும் நடத்தையை குறை கூறுதல் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் ஆனந்த்ராவ் அட்சூல் மற்றும் மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக இவர்கள் தொடர்ந்து என்னை மிரட்டி வருகின்றனர். நான் வேட்பு மனு பூர்த்தி செய்தால், அன்றுதான் எனது வாழ்வில் இறுதி நாளென எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டினார்கள் எனத் தெரிவித்தார்.

நவ்னீத்தின் இந்த குற்றச்சாட்டை மறுத்த 67 வயதான ஆனந்த்ராவ் அட்சூல், நவ்னீத் தவறான புகாரை அளித்து மக்களின் அனுதாபத்தை சம்பாதிக்க நினைக்கிறார் என கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர் நவ்னீத்தின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்