ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு எதிராக பிரச்சாரம் - அன்னா ஹசாரே

செவ்வாய், 18 மார்ச் 2014 (13:48 IST)
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் வேட்பாளர்களை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொள்ளபோவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
 
FILE

இது குறித்து மகராஷ்டிராவில் உள்ள அவரது சொந்த ஊரான ரலேகன் சித்தியில் பேசிய அன்னா ஹசாரே, நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஏதேனும் ஒரு தொகுதியில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளன.

FILE
மகராஷ்டிராவின் ஷீரடி தொகுதியில் சிவசேனா வேட்பாளராக போட்டியிடும் பபன் கோலப் மீது ஊழல் பின்னணி உள்ளது. இவர் அமைச்சராக இருந்தப்போது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பதவி விலகினார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

இதேபோல ஒஸ்மனாபாத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பதம்சிங் பாட்டீல் மீது கொலை வழக்கு உள்ளது. பவன்ராஜே நிம்பால்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் இந்த வழக்கில் சிறையிலும் இருந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது குறித்து சிவ சேனா கட்சி தலைவர் உதவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஆகியோருக்கு கடிதம் எழுதி விவரம் கேட்க உள்ளேன். மேலும் மேற்கண்ட இரு வேட்பாளர்களுக்கு எதிராகவும் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்