காங்கிரசின் சாதனைகளை பாஜக அபகரிக்கிறது - ராகுல் காந்தி

வெள்ளி, 14 மார்ச் 2014 (14:59 IST)
காங்கிரஸ் கட்சியின் பல ஆண்டுகால சாதனைகளை தாங்கள் செய்ததாக பாஜக கூறிக்கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
FILE

மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களை அன்னியர்கள் என்று முத்திரை குத்தி பிரித்தாளும் அரசியலில் மோடி ஈடுபடுவதாகவும் அவர் குறை கூறினார். ஹரியாணா மாநிலம் சோனிபத் மாவட்டம் கன்னூரில் விவசாயிகளுடன் ராகுல் திங்கள்கிழமை கலந்துரையாடியபோது கூறியதாவது:

அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே பாஜக கவனம் செலுத்துகிறது. மக்களிடம் அதிகாரத்தைக் கொடுப்பதைத்தான் காங்கிரஸில் இருக்கும் நாங்கள் நம்புகிறோம்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நம்மவர்கள் என கருதுகிறோம். அமெரிக்காவில் வாழும் இந்தியரும் நமது நாட்டுக்காரர் என்றே உணர்கிறோம். ஆனால், அவர்களுக்கு (பாஜக) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் மகராராஷ்டித்தில் வசித்தால் அவர் அன்னியர், குஜராத்தில் ஒரு சீக்கியர் இருந்தால் அவர் வெளியாள், ஹரியாணாவைச் சேர்ந்த சிலர் பஞ்சாபில் வாழ்ந்தால் அவர்களும் அன்னியர் ஆகின்றனர். தற்போது வல்லபபாய் பட்டேலை கையில் எடுத்துள்ளனர். சில ஆண்டுகள் கழித்து உணவு பாதுகாப்பு மசோதா, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் பல திட்டங்களை உரிமை கொண்டாடுவார்கள் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்