சேவாலயா ஆசிரியர்களுக்கு இராஜஸ்தானி குழுமம் சிறந்த ஆசிரியருக்கான விருது
புதன், 5 செப்டம்பர் 2012 (20:13 IST)
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா அறக்கட்டளையில் இன்று 05.9.2012 ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. விஜயகுமார் பப்னா (தலைவர், இராஜஸ்தானி குழுமம்) அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர் தின விழா உரை நிகழ்த்தினார்.
WD
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையே நாம் ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம். ஆசிரியராக இருந்து நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்தவர் ஆவார். ஆசிரியராக பணி என்பது மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் மட்டுமன்று. நல்ல பண்பு மற்றும் குணங்களை கற்றுத்தந்து எதிர்கால வாழ்க்கையில் முன்னேற்றமடையச் செய்வதாகும். ஆசிரியர் பணி என்பது வெறும் சமூக சேவை மட்டுமன்று. தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மகத்தான சேவை என்பதை ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல் நல்ல ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் சமுதாயமே சிறந்ததாக இருக்க முடியும் என்பதையும் மற்றவர்கள் உணர வேண்டும். மாணவர்கள் யாவரும் நல்ல ஆசிரியர்களாக வழிகாட்டிகளாக மாற உத்தமமான ஆசிரியர் பணியை தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்களது வாழ்க்கை பயணம் சிறப்பானதாக அமையும்.
நிகழ்ச்சியில் இறுதியில் செப்டம்பர் மாதம் பிறந்த நாள் கொண்டாடும் ஆசிரியர்களுக்கு பிறந்த நாள பரிசாக நல்ல தரமான புத்தகங்களும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குவது போல இந்த ஆண்டும் ஆசிரியர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஆசிரியர் தின விழா பரிசாக் வெள்ளி காசுகளும் வழங்கப்பட்டன.
சேவாலயாவில் இந்த ஆண்டு முதல் சிறந்த ஆசிரியருக்கான சிறப்பு விருது இராஜஸ்தானி குழுமத்தால் வழங்கப்பட்ட்து. இவ்விருதை இந்த ஆண்டு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியரான ஆர்.வி.விஜயராகவன் அவர்களுக்கு வழங்கினர். மேலும் 78 சேவாலயா ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வி முரளிதரன் அவர்கள் வரவேற்க பள்ளியின் தலைமையாசிரியை அன்னப்பூர்ணா அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுப்பெற்றது.