MBBS முதற்கட்ட கலந்தாய்வு நாளை நிறைவு

வியாழன், 16 ஜூலை 2009 (12:37 IST)
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக சென்னையில் நடந்து வரும் முதற்கட்ட கலந்தாய்வு நாளையுடன் முடிகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள், 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 283 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கடந்த 8 தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, இதுவரை மொத்தம் 1,308 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 44 இடங்கள், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கு 33 இடங்கள், பழங்குடி வகுப்பினருக்கு 13 இடங்கள் என மொத்தம் 90 காலியிடங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் மாணவர்களைச் சேர்க்க இன்றும், நாளையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி (19 காலியிடம்) கோவை பி.எஸ்.ஜி. (18), ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி. (11), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை (7) ஆகிய நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 55 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

இந்த சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு இடம், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 42 இடங்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவினருக்கு 9 இடங்கள், பழங்குடி வகுப்பினருக்கு 3 இடங்கள் என மொத்தம் 55 இடங்கள் காலியாக உள்ளன.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்குவதற்குள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் மாநில ஒதுக்கீடான 85 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்