B.Ed. தேர்வு முடிவுகளில் குளறுபடி: தேர்வு எழுதிய மாணவர்கள் அவதி

திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (17:06 IST)
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு எழுதிய மாணவர்களில் சில மாணவர்களின் தேர்வு முடிவில் அவர்கள் பரீட்சை எழுதவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் 5 கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு தெற்குகள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் கடந்த மே மாதம் நடைபெற்றது.

தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளைப் பார்த்த மாணவ, மாணவிகளில் பலர் அதிர்ச்சியடைந்தனர். தேர்வு எழுதிய பாடங்களில் “ஆப்சென்ட” என தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததே இதற்கு காரணம்.

இதுதொடர்பாக தேர்வு மையங்களில் மாணவிகள் கேட்ட போது தேர்வுகள் அனைத்தும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்பட்டது. அவர்கள்தான் இதற்கு பொறுப்பு என்றனர்.

இதனால் சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிலை இம்மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்