விருப்பத்தின் பேரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: CBSE திட்டம்

செவ்வாய், 14 ஜூலை 2009 (13:52 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை விருப்பத்தின் அடிப்படையில் எழுதும் தேர்வாக மாற்ற மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) திட்டமிட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை விவாதத்தின் போது உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தீஸ்வரி, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை விருப்பத்தின் அடிப்படையில் எழுதும் தேர்வாக மாற்ற CBSE திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் திறனை உள்மதிப்பீடு செய்யும் முறையும் தொடரும்.

10ஆம் வகுப்புத் தேர்வை விருப்பத் தேர்வாக மாற்றுவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக 9, 10ஆம் வகுப்பில் தேவையான பயிற்சிகள் அளிப்பதுடன், வரையறுக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்படும் என்றார்.

மேலும், CBSE வரையறுக்கும் பாடத்திட்டங்களின் அடிப்படையில், மாணவர்களுக்கான உள்மதிப்பீட்டுத் தேர்வை பள்ளிகள் நடத்தும் என்றும், இதற்கான வினாத்தாள் கல்வி வாரியம் நடத்தும் தேர்வுக்கான வினாத்தாள்களைப் போலவே இருக்கும் என்றும் கூறிய புரந்தீஸ்வரி, பள்ளிக் கல்விக்காக நாடு முழுவதும் ஒரே தேசிய வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்