விடைத்தாள் திருத்தலில் அலட்சியம்: 4 ஆசிரியர்களுக்கு தடை

திங்கள், 15 ஜூன் 2009 (16:45 IST)
விடைத்தாள்களைச் சரியாக திருத்தாத 4 ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து நீக்கி சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 130க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 1.2 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் நவம்பர் 2008 பருவத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட போது, விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் பல மாணவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது.

எனவே பல்கலைக்கழக விதிப்படி, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்குச் செலுத்திய கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

மதிப்பெண் மாற்றம் பற்றி ஆராய பல்கலைக்கழகம் விசாரணை மேற்கொண்டது. அதில் விடைத்தாள்களை 4 ஆசிரியர்கள் சரியாக திருத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த 4 ஆசிரியர்களையும் விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்