மாணவர் வருகையைக் குறைக்க யுகே முடிவு?

செவ்வாய், 23 நவம்பர் 2010 (17:06 IST)
இங்கிலாந்தில் உள்ள தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் ஐரோப்பியர் அல்லாத நாடுகளின் மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு குடியேற்றத் துறை முடிவு செய்துள்ளதென தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்திற்கு படிக்க வரும் அயல் நாட்டு மாணவர்களில், குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் பட்டப்படிப்புகளை விட வணிக கல்வியையும், பள்ளி உயர் கல்வியையுமே படிக்க வருகின்றனர் என்பதும், இவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பளிக்கும் பல தனியார் கல்லூரிகள் ‘போகஸ’ கல்லூரிகள் என்பது தெரியவந்துள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி ஐயத்திற்குரிய கல்லூரிகள் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மட்டும் 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இப்படிப்பட்ட போகஸ் கல்லூரிகளின் உரிமங்கள் 56 இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் நாட்டிற்கு படிக்க வரும் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், அறிவுமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்டவர்களை பயன்படுத்திக்கொள்ள இங்கிலாந்து தயாராக உள்ளதாகவும், அப்படிப்பட்டவர்களைத் தவிர்த்து மற்ற குடியேறிகளை தவிர்க்கவும் அந்நாட்டு உள்துறை செயலர் டெரீஸ்ஸா மே முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்திற்கு சராசரியாக இரண்டு இலடச்ம் பேர் குடியேறுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கையை சில பத்தாயிரங்களாக குறைப்பேன் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்தே வெற்றி பெற்று பிரதமராகியுள்ள டேவிட் கேமரூன், அந்த வாக்குறுதியின் தொடர்ச்சியாகவே மாணவர்கள் வருகையை குறைக்கும் நடவடிக்கையும் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்