மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கூடுதலாக 300 இடங்களை சேர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 9,000 இடங்களில் 'வரும்முன் காப்போம்’ முகாம்கள் நடத்தப்பட்டன. மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால் இத்திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே பணிபுரிய விரும்புகின்றனர். இந்தக் குறைபாட்டைப் போக்க, முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கென கூடுதலாக 300 இடங்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கு 1500 இடங்கள் மட்டுமே உள்ளன. எம்.பி.பி.எஸ் முடித்த 120 மருத்துவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை மயக்கவியல் மருத்துவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியத்துக்கும் தலா ஒரு ஆம்புலன்ஸ் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 150 ஒன்றியங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சுப்புராஜ் கூறினார்.