பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு

புதன், 24 ஜூன் 2009 (11:39 IST)
பொறியியல் படிப்பு‌க்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றுமஅரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது.

மாணவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள விவரங்கள், ரேண்டம் எண் ஆகியவை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடுகிறது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் முடிவு செய்யப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், கணக்கு பாடத்தில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 100க்கும், இயற்பியல் பாட மதிப்பெண்கள் 50க்கும், வேதியியல் மதிப்பெண்கள் 50க்கும் கணக்கிடப்பட்டு, அந்த மூன்றின் கூட்டுத் தொகையை வைத்து கட்-ஆஃப் மார்க் நிர்ணயிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்