டிரை-வாலி பல்கலை மூடல் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்: அமைச்சர் கிருஷ்ணா

வியாழன், 27 ஜனவரி 2011 (17:07 IST)
இந்திய மாணவர்களுக்கு போலி விசா பெற உதவியதற்காக அமெரிக்க அரசால் மூடப்பட்டுள்ள கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக் கழகம் குறித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய தூதரங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

டிரை-வேலி பல்கலையில் 1,500க்கும் அதிகமான இந்திய (ஆந்திர) மாணவர்கள் பயின்று வந்தனர். இந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு எஃப்-1 விசா மோசடியாக பெற இந்தப் பல்கலை நிர்வாகம் உதவியுள்ளது. அது மட்டுமின்றி, அவர்கள் வெளியில் பணி செய்துக்கொண்டே படிக்க தகுதி பெறாதவர்களாக இருந்தும் அவர்களுக்கு பணித் தகுதி பெற முகவரியை அளித்துள்ளது என்று அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்றத் துறை கண்டுபிடித்துள்ளது. இதனால் அந்த பல்கலை மூடப்பட்டுவிட்டது. இதனால் அங்கு பயின்று வரும் மாணவர்கள் 1,550 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களில் 95 விழுக்காட்டினர் இந்திய மாணவர்களாவர்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கலிஃபோர்னியாவிலுள்ள நமது இந்திய துணைத் தூதரகத்திடமிருந்து அறிக்கை பெற்று அனுப்புமாறு இந்திய தூதரகத்தைக் கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த அறிக்கை வந்ததும், அது பற்றி அமெரிக்க அரசிடம் பேசப்படும் என்றும் கூறிய அமைச்சர் கிருஷ்ணா, பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் இந்திய துணைத் தூதரகத்தை நாடாதது வினோதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்