செவிலியர் பயிற்சி : ஒரே நாளில் பதிவு செய்யும் திட்டம்
வியாழன், 12 பிப்ரவரி 2009 (12:54 IST)
தமிழகத்தில் செவிலியர் படிப்பு படித்தவர்கள் செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய 2 மாதங்கள் காத்திருக்காமல், ஒரே நாளில் பெயர்ப் பதிவு செய்யும் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று செவிலியர் கவுன்சில் பதிவாளர் ஜி.ஜோசபின் ஆர்.லிட்டில் பிளவர் கூறினார்.
இது குறித்து நர்சிங் கவுன்சில் பதிவாளர் ஜி.ஜோசபின் பேசுகையில், நர்சிங் கல்வியை முடித்து விட்டு பதிவு செய்வதற்காக ரூ.780 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த அலுவலகத்தில் போதுமான இடவசதி இல்லாமல் இருக்கிறது. எனவே இடவசதியை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு நர்சிங் கவுன்சிலை தனி இடத்துக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளோம்.
செவிலியர் படிப்பை முடித்தவர்கள் இந்த கவுன்சிலில் பதிவு செய்ய தற்போது 2 மாதங்கள் ஆகிவிடுகின்றன. இந்த காலக்கட்டத்தை மேலும் சுருக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இனிமேல் நர்சிங் பதிவு செய்கிறவர்கள் காலையில் விண்ணப்பம் கொடுத்தால் மாலையில் பதிவைப் பெற்றுவிடலாம். இந்தத் திட்டம் வரும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். பதிவுக் கட்டணமும் அதிகமாகும் என்று அவர் கூறினார்.