இந்திய மாணவர்களுக்கு கண்காணிப்பு டிராக்கர் அணிவிப்பு: நியாயப்படுத்துகிறது யு.எஸ்.

திங்கள், 31 ஜனவரி 2011 (22:38 IST)
கலிஃபோர்னியாவின் டிரை-வாலி பல்கலைக் கழகத்தால் விசா மோசடிக்கு ஆளான இந்திய மாணவர்கள் சிலரின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை விலங்கைப் போல் மாட்டியிருப்பதை, “சிறைக்குப் பதிலான பொதுவான நடைமுறைதான” என்று அமெரிக்க அரசு சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வுத் துறை நியாயப்படுத்தியுள்ளது.

‘மானிடரிங் டிராக்கர்ஸ்’ என்றழைக்கப்படும் இந்த கண்காணிப்பு விலங்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அணிவிக்கப்படுவதால் அவர்களுடைய சுதந்திரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், விசாரணையில் உள்ள அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எந்த நேரத்திலும் அறிந்துகொள்ளவே இந்த முறை கையாளப்படுகிறது என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இப்படிப்பட்ட டிராக்கர்களை பொருத்துவது ஏற்புடையதல்ல என்றும், அதனை உடனடியாக விலக்க வேண்டும் என்றும் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

“பல்வேறு விசாரணைகளில் உள்ளவர்களுக்கு டிராக்கர்களை பயன்படுத்தவது அமெரிக்காவில் பரவலாக நடைமுறையில் உள்ளது. அதனை பொருத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி என்றோ அல்லது ஐயத்திற்கிடமானவர் என்றோ பொருளில்லை. அந்த கண்காணிப்பு கருவியில் இருந்து ரேடியோ அலைக்கற்றை வெளிப்படுகிறது. அதனை வைத்து அந்த நபர் எங்கிருக்கிறார் என்பதை அறியலாம். விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் சிறையில் அடைப்பதை விட, இப்படி கண்காணிப்பு டிராக்கரை மாற்றாக பயன்படுத்தப்படுகிறது” என்று அமெரிக்கத் தூதரக விளக்கம் கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்