‘சக்ஸஸ்’ திட்டத்தின் கீழ் 20 மாதிரி பள்ளிகள் திறக்க திட்டம்

வியாழன், 16 ஜூலை 2009 (13:42 IST)
இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்திட ‘சக்ஸஸ்’ என்ற திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் இந்தக் கல்வியாண்டில் 20 மாதிரி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அனைவருக்கும் ஆரம்பக் கல்வித் திட்டம’ தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பின், ஒவ்வொரு குழந்தையும் 10 ஆண்டுகள் பள்ளிக் கல்வியினை முடிப்பதை உறுதிசெய்யும் நோக்குடன் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' என்ற இலக்கினை எட்டுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, மத்திய அரசின் உதவியுடன் இடைநிலைக் கல்வியை தரமானதாக்கிட ‘Success’ எனும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2015ஆம் ஆண்டிற்குள் 16 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான இடைநிலைக் கல்வி வழங்குவதும், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் மேல்நிலைக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2009-2010 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்திற்கென மாநில அரசின் பங்களிப்பாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 20 மாதிரி பள்ளிகளை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு.