சென்னையில் உள்ள மருத்துவம், பொறியியல், அறிவியல், கலை கல்லூரிகளில் ராகிங், ஈவ்-டீசிங் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு கண்காணிப்பு படை அமைக்க சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் சென்னையில் இன்று கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் ராகிங், ஈவ்-டீசிங் கொடுமைகள் நடக்காமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றியும், கல்லூரி முதல்வர்களின் ஆலோசனைகளை ஆணையர் ராஜேந்திரன் கேட்டறிந்தார்.
கூட்டம் முடிந்ததும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஷகில் அக்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லூரிகளில் ராகிங், ஈவ்-டீசிங் நடைபெற்றால் 95000-99100 என்ற செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ராகிங், ஈவ்-டீசிங் நடப்பதை தடுக்காவிட்டாலோ அல்லது புகார் தெரிவிக்காமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களும் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறினார்.