பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம்: அமைச்சர் பொன்முடி

வெள்ளி, 10 ஜூலை 2009 (16:24 IST)
பொறியியல் படிப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று துவங்கிய பொதுப் பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வை துவக்கி வைத்துடன், 200/200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரியில் சேருவதற்கான இடஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 366 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், 25 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மொத்தம் 391 கல்லூரிகள் உள்ளன.

இந்த ஆண்டு மேலும் 37 கல்லூரிகளுக்கு புதிதாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரித்துள்ளது. கடந்த முறை 85 ஆயிரமாக இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தற்போது ஒரு லட்சத்து 930 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் இடம் கிடைக்கும். எனவே பெற்றோர், மாணவர்கள் பதற்றம் இல்லாமல் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொழிற்கல்வி பிரிவுக்கான 3,523 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் 2,291 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். மீதமுள்ள 1,232 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்றார்.