புதுச்சேரியில் பயோ-மெடிக்கல் படிப்பு: முதல்வர் வைத்திலிங்கம் துவக்கினார்

வெள்ளி, 27 நவம்பர் 2009 (16:21 IST)
புதுச்சேரியில் உள்ள ஃப்ரான்கோ இந்தியன் தொழில்பயிற்சி மையத்தில் பயோ-மெதிக்கல் படிப்பை முதல்வர் வைத்திலிங்கம் இன்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் வைத்தியலிங்கம், “வேலைவாய்ப்பு உள்ள படிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் உடனடியாக பணிக்கு செல்ல முடியும்.

தற்போது சில பணிகளுக்கு குறைந்த அளவு பணியாளர்களே இருக்கின்றனர். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் இயந்திரம் உள்ளது. அதனை இயக்கத் தேவையான நிபுணரும் உள்ளார். ஆனால் அந்த இயந்திரம் அளிக்கும் தகவல்களை எழுதக் கூடிய நபர் இல்லாத காரணத்தால் அதனை இயக்குவதில் சிக்கல் உள்ளது என்றார்.

புதுவையில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதில் தாமதம் ஏன் என சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த மருத்துவக் கல்லூரியை உலகத் தரத்துடன் நிர்மாணிக்க ரூ.ஆயிரம் கோடி செலவாகும்.

ஆனால் அந்தக் கல்லூரிக்கு சர்வதேசத் தரத்திலான கட்டமைப்பு வேண்டுமா? அல்லது சர்வதேச தரத்துடன் கூடிய கல்வி தேவையா? என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்தது. முடிவில் சர்வதேச தரத்துடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அந்தக் கல்லூரி கட்டப்பட உள்ளது என வைத்திலிங்கம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்