பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு: 29% மாணவர்களே தேர்ச்சி

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (13:48 IST)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட உடனடித் தேர்வில், 29% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான உடனடித் தேர்வை மொத்தம் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 865 பேர் எழுதினர்.

இதில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்து தேர்வெழுதிய 53,250 பேரில் 25,739 பேர் தேர்ச்சி (48.3%) பெற்றுள்ளனர். 2 பாடங்களில் தோல்வியடைந்து தேர்வெழுதிய 44,079 பேரில் 8,086 பேர் (18.3%) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வியடைந்து தேர்வெழுதிய 24,536 பேரில், 1,601 பேர் மட்டுமே (6.5%) தேர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்தாண்டு இதுபோல் நடத்தப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடித் தேர்வில் 30% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அந்த விகிதம் இந்தாண்டு 29% ஆக குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்