பகுதி நேர வேலைக்கு தட்டுப்பாடு: இங்கிலாந்தில் அவதிப்படும் இந்திய இளைஞர்கள்

புதன், 2 டிசம்பர் 2009 (13:06 IST)
பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே மேல்படிப்பைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் இங்கிலாந்துக்கு வந்த இந்திய மாணவர்கள் தற்போது உணவுக்கே அவதிப்படும் நிலை உருவாகியுள்ளதாக பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புள்ளிகள் அடிப்படையில் விசா வழங்கும் முறை கடந்த ஏப்ரல் முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் இங்கிலாந்திற்கு வரும் அயல்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

மேற்படிப்பைத் தொடரும் அதேவேளையில் தங்களது உணவு, இருப்பிட தேவைகளை பகுதி நேர பணி மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலரும் இங்கிலாந்து வருகின்றனர். ஆனால் பகுதி நேர வேலை கிடைக்காததால் ஒரு வேளை உணவுக்கே அவர்கள் திண்டாடுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்திய இளைஞர்கள் படும் அவஸ்தை பற்றி, சவுத்ஆல் நகரில் உள்ள குருத்வாராவின் தலைவர் திதார் சிங் ரந்த்வா கூறுகையில், “குருத்வாராவில் அளிக்கப்படும் இலவச உணவுக்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பல மாணவர்கள் தெருக்களில் திரிவதைப் பார்க்க முடிகிறது. இவ்விதம் அவதிப்படும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று தெரிகிறது. பலரும் உணவின்றி தவிப்பதைப் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு உணவு அளிக்க குருத்வாராவில் முடியும். ஆனால் அவர்கள் தங்குவதற்கான இடவசதியை அளிக்க முடியாது. தவிர்க்க முடியாத சூழலில் உள்ளவர்களை ஓரிரு நாள்கள் மட்டும் தங்குவதற்கு அனுமதிக்கிறோம” என ரந்த்வா குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் மாணவர்கள் வருகை அதிகரிப்பு ஆகியனவும் தற்போதைய சூழலுக்கு முக்கியக் காரணம் என்றும் திதார் சிங் ரந்த்வா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு மேல்படிப்பு பயில வரும் மாணவர்கள் தங்குமிட வசதி, உணவு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் செய்து கொண்ட பிறகே இங்கிலாந்து வர வேண்டும் என்றும் ரந்த்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்