10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடிதம் எழுதியுள்ளார். அதை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விநியோகிக்கும்படி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், முக்கிய தேர்வுகளில் முத்திரைப் பதிக்கப்போகும் இனிய இளம் நண்பர்களே, இந்த தேர்வு வாழ்வின் திசையை தீர்மானிக்கும் தேர்வு. மகிழ்ச்சியுடன் படித்தால் படித்தவை பசை தடவியதுபோல பற்றிக்கொள்ளும். உங்கள் ஆற்றல் அளவிற்கு அரியது. இது சாதிக்கும் பருவம். சவால்களை சந்திக்கும் பருவம். இனி புதிதாக படிக்க நேரம் இல்லை. தேர்வில் பதற்றத்தை தவிர்த்து நம்பிக்கையை கைப்பிடியுங்கள். பயத்தை விலக்கி, ஒழுங்கு முறையை கடைப்பிடியுங்கள்.
தேர்வு அறைக்குள் ஒரு கணம் கண்களை மூடுங்கள். அனைத்து வினாக்களையும் எளிதாக காட்சிப்படுத்துங்கள். பூக்களை கையாளுவதுபோல கேள்விகளை கையாளுங்கள். முதலில் நன்றாக தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுங்கள். முத்து முத்தான கையெழுத்தால் விடைத்தாளை செறிவான பதில்களால் செம்மையாக்குங்கள். அனைத்து வினாக்களுக்கும் சரியாக விடை அளித்து மகிழ்ச்சி துளியால் முற்றுப்புள்ளி வையுங்கள்.
அதனால் படிப்பது சுகமாகட்டும், வாசிப்பது வளமாகட்டும். மகிழ்ச்சியுடன் படித்து மாபெரும் சாதனை புரியுங்கள். உளமார வாழ்த்துகிறேன். மனமாற வேண்டுகிறேன் என்று தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.