சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி வரும் 23-ந் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து காலவரையின்றி மூடப்பட்டது. ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டு 19-ந் தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.
வகுப்புகள் 9 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியதால் சட்டக்கல்லூரி உள்பட அனைத்து கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சட்டக்கல்லூரிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டது.
மே மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடக்க இருப்பதால் மாணாக்கர்களின் நலன் கருதித உடனடியாக கல்லூரி திறக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.
இதன் அடிப்படையில், சென்னை அரசு சட்டக்கல்லூரி 23-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் முகமது இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்பின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் முதுநிலை சட்டப்படிப்புகளுக்கான வகுப்புகள் 23-ந் தேதி தொடங்கப்படும்.
மற்ற வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.