கடல்சார் பல்கலைக் கழகத்தில் புதிய படிப்புகள் அறிமுகம்

செவ்வாய், 21 ஜூலை 2009 (15:47 IST)
இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தை மேம்படுத்துவதற்கு கப்பல் துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான திட்டம் மற்றும் தொடர் செலவுகளுக்கு செலவினங்கள் நிதிக் கமிட்டி மூலமாக நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடற்படை கட்டுமானம் மற்றும் கடல் பொறியியல் துறையில் பி.டெக், துறைமுக மற்றும் கப்பல் துறை மேலாண்மையில் எம்.பி.ஏ., சர்வதேச போக்குவரத்து மற்றும் சரக்குகள் கையாளுதல் துறையில் எம்.பி.ஏ., கடற்படை கட்டுமானம் மற்றும் கடல் பொறியியல் துறையில் முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2007ம் ஆண்டின் மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் தற்போதைய படிப்புகளில் அதிக மாணவர்களை சேர்த்து கொள்வதற்கு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்