இந்தாண்டு ஆசிரியர் பயிற்சிக்கு 30,000 பேர் விண்ணப்பம்
சனி, 6 ஜூன் 2009 (13:01 IST)
இந்தாண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர, 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். சேர்க்கைக்கான கலந்தாய்வு திருச்சியில் நடைபெறும் என்று தெரிகிறது.
அரசு, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 735 உள்ளன. இவற்றில் 45 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இதில் 50 சதவீதம் ஒற்றை சாளர முறையின் கீழும், 50 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் மாணவர் சேர்க்கை நடக்கும். இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன.
ஜூன் 3ஆம் தேதி கடைசி நாள். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வு, வழக்கமாக சென்னை கல்லூரி சாலையில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் நடக்கும்.
போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்ட வசதி குறைபாடு காரணமாக இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளி சேர்க்கை கலந்தாய்வு திருச்சியில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.