ஆன்-லைன் CAT தேர்வில் கோளாறு இல்லை: பெங்களூரு ஐ.ஐ.எம். இயக்குனர்

சனி, 28 நவம்பர் 2009 (17:15 IST)
ஆன்-லைன் மூலம் முதன்முறையாக இன்று நடத்தப்பட்ட முதல் 2 கட்ட நுழைவுத்தேர்வில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை என்று பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்விக் கழகத்தின் இயக்குனர் பங்கஜ் சந்த்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய மேலாண்மைக் கல்விக் கழகங்களில் (Indian Institute of Management - IIM) சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு முதல் முறையாக கணினியின் வாயிலாக இன்று முதல் துவங்கியது.

இந்தியா முழுவதிலும் 32 நகரங்களிலுள்ள 105 மையங்களில் கணினி வாயிலாக முதல் முறையாக பொது நுழைவுத் தேர்வு (Common Admission Test - CAT) இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதனை நடத்தும் பொறுப்பு பிரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் 10 கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்வில் 2.4 இலட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு நாளும் இரண்டு சுற்றுத் தேர்வுகள் நடைபெறும். முதல் சுற்றுத் தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், இரண்டாவது சுற்று மதியம் 3.30 முதல் மாலை 6.00 மணி வரையிலும் நடைபெறும்.

இதுகுறித்து பங்கஜ் சந்த்ரா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்ட ஒரு சில மையங்களில் ஓரிரு கணினிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கு வைரஸ் தாக்குதல் காரணமாகும். அந்த மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் ஆன்-லைனில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படும” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்