நோயாளிகளிடம் கட்டணக்கொள்ளை... ஊழல் மடமான எய்ம்ஸ் மருத்துவமனை - அதிர்ச்சி ரிப்போர்ட்!

திங்கள், 24 பிப்ரவரி 2014 (15:24 IST)
எய்ம்ஸ் மருத்துவமனை. இது மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் நாட்டின் மிகப்பெரிய மருத்துவ மையமாகும். மத்திய சுகாதாரத் துறையின் உத்தரவின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனை கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யபட்டன. அதில் அதிர்ச்சி தரும் பல விவகாரங்கள் அம்பலமாகியுள்ளதாக இந்தி ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
FILE

இந்த லட்சணத்தில் 58 ஆண்டுகளாக தணிக்கையே செய்யப்படவில்லை. தணிக்கைக் குழு 2012ஆம் ஆண்டு டிசம்பரிலேயே தனது 340 பக்க தணிக்கை அறிக்கையை தயார் செய்துவிட்டது.

ஆனால் தணிக்கை அறிக்கை பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட தனிப்பட்ட நபர்கள் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனவரி 2013 முதல் 2014 பிப்ரவரி வரை மோது மோதென்று மோதி கடைசியாக தணிக்கை அறிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டது.

2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஆஞ்ஜியோ கிராபி, நியூரோ சர்ஜரி, சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பிரிவுகளில் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணக்கொள்ளை நடத்தப்பட்டு மொத்தம் 53.68 கோடி கூடுதல் வசூல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மக்கள் நலனுக்காக நடத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் மற்ற தனியார் மருத்துவமனை கட்டணக்கொள்ளை போல் கூடுதல் கட்டண வசூல் வேட்டை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அனைத்தையும் விட வேதனையானது, சமூக ஷேம நல நிதி என்ற பெயரில் மக்கள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படவேண்டிய மிகப்பெரிய தொகை ஒன்று வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, வெறும் வட்டிக்காக இது செய்யப்பட்டுள்ளது!!

மேலும் ஆய்வு உதவி என்ற பெயரில் பல்வேறு இன்ஸ்டிட்யூஷன் மற்றும் துறைகளுக்கு ரூ.104 கோடி செலவிட்டுள்ளது. இந்த ஆய்வு உதவியின் தன்மை என்ன? என்ன ஆராய்ச்சி செய்யப்பட்டது? என்ற விவரங்கள் இல்லை.

மேலும் மருந்து நிறுவனங்களிடமிருந்து அபராதம் என்று ரூ.9 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது பணியை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாம்!! இதெப்படி இருக்கு?

இந்த தணிக்கை அறிக்கை முழுதும் வெளிவரும்போது இன்னொரு பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரூ.400 கோடி வரை ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்று அவதானிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்