தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போர் என்று கூறி, வன்னிப் பகுதியில் இருந்த பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்த பல பத்தாயிரக்கணக்கான மக்களை பூண்டோடு கொன்றொழித்த சிறிலங்க அரசின், அதன் இராணுவத்தின் அராஜக செயலைக் கண்டிக்காத ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், அங்கு நடந்த போரில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் எண்ணிக்கை ஒப்புக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாக இருந்தது என்று கூறியுள்ளார்!
webdunia photo
FILE
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை (மே 15ஆம் தேதி வரை 20,000 பேர் என்பது ஐ.நா.வின் வெளியிடப்படாத கணக்கு) மறைப்பதோடு மட்டுமின்றி, அதனை குறைத்துக் காட்டி வருகிறது ஐ.நா. என்று தி டைம்ஸ் நாளிதழ் குற்றம் சாற்றியிருந்தது பெரும் சர்ச்சை உருவாக்கியுள்ள நிலையில், அதனை மறுத்துள்ள பான் கீ மூன், “மொத்த எண்ணிக்கை எவ்வளவு ஆனாலும் அது ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது” என்று மட்டும் கூறியுள்ளார்.
நியூ யார்க்கில் ஐக்கிய நாடுகள் பொது அவையில் பேசியபோது இவ்வாறு தெரிவித்த பான் கீ மூன், அப்போதும் கூட கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரத்திடம் உள்ள கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை வெளியிடவில்லை!
எங்களுக்குக் கிடைத்த அதிகாரப்பூர்வமான தகவல் இது என்று எண்ணிக்கையை வெளியிட்டிருப்பாரானால், அது உலக அரசுகளின் கண்களைத் திறக்காவிட்டாலும், உலக மக்களின் கருத்தை திறந்திருக்கும். எப்படிப்பட்ட மானுடப் படுகொலை அங்கே அரங்கேற்றப்பட்டது, எத்தனை நாடுகள் அதற்கு உறுதுணையாக இருந்தன, அதுநாள் வரை அதைத் தடுக்க ஐ.நா. அவை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கும். அதையெல்லாம் தவிர்க்க இப்படி, “எண்ணிக்கை எவ்வளவாயினும் அது ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது” என்று நமது கற்பனைத் திறனிற்கு விட்டுவிட்டார் பான் கீ மூன்.
இன்றைக்கு இதனை ஐ.நா.அவைக்கு தெரியப்படுத்தும் பான் கீ மூன், கடந்த மாதம் 22, 23ஆம் தேதிகளில் இலங்கைக்குச் சென்றாரே அப்பொழுது இதனை உலகிற்கு சொல்லிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? யார் தடுத்தது?
“அந்தத் தகவல்கள் எதுவும் ஐ.நா.விடம் இருந்து எங்களுக்கு கிட்டவில்லை, ஆனால் கிடைத்த தகவல்கள் அனைத்தும் எங்களிடம் இருந்த விவரத்தோடு பொருந்தவில்லை” என்றும் கூறி குழப்பியுள்ளார் பான் கீ மூன். அப்படியானால் உண்மையான எண்ணிக்கை தன்னிடம் (ஐ.நா.)விடம் இல்லையென்றுதானே பொருள்? பிறகு எப்படி எண்ணிக்கை எவ்வளவாயினும் அது ஒப்புக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது என்று கூறுகிறார்? புரியவில்லை.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிவது, இறுதி கட்டப் போரில் அங்கு பல பத்தாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக, உறுதி செய்யக் கூடிய அளவிற்கு அந்தப் பகுதியில் (பாதுகாப்பு வலயத்தில்) இருந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் ஐ.நா.வின் கொழும்புத் தூதரகத்திடம் இருந்தது என்பதே.
ஏனென்றால் மே 15ஆம் தேதிவரை அங்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த மனிதாபிமான பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களுக்கு அங்கு எவ்வளவு மக்கள் இருந்துள்ளனர் என்று விவரம் தெரியும்.
மே 16ஆம் தேதி இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிந்தப் பிறகுதான் சிறிலங்க இராணுவத்தின் தாக்குதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன் பிறகே செஞ்சிலுவை சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
அதன்பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு (ஞாயிறு, திங்கள் கிழமைகளில்) கடும் தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்த மக்கள் அனைவரும் கொன்றொழிக்கப்பட்டனர். எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர், எவ்வளவு பேர் தப்பினர்? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த இடத்தில்தான் தி டைம்ஸ் ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியது. போர் முடிந்துவிட்டதாக சிறிலங்க இராணுவம் அறிவித்ததும், போர் நடந்த பகுதியில் மக்கள் யாரும் இல்லை என்று கொழும்புவி்ற்கான ஐ.நா. தூதர் ஊடகங்களிடம் கூறியிருந்தார். ஆனால் மறுநாள் அப்பகுதியில் இருந்து படுகாயங்களுடன் சற்றேறக் குறைய 20,000 பேர் வெளியேறி சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிக்கு வந்ததாக உறுதியான தகவல் வந்தது.
webdunia photo
FILE
இதனை சுட்டிக்காட்டிய தி டைம்ஸ் இதழ், அங்கிருந்த (பாதுகாப்பு வலயப் பகுதி) மக்கள் அனைவரையும் பூண்டோடு கொன்றொழிக்க சிறிலங்க அரசிற்கு ஐ.நா. அளித்த மெளன சம்மதமே அதன் கொழும்பு தூதரின் அறிவிப்பு என்று குற்றம் சாற்றியது.
இந்தப் பின்னணியில்தான், இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய முடியாத நிலையில், அங்கு பன்னாட்டு புலனாய்வு நடத்த வேண்டும் என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.
பன்னாட்டு புலனாய்வு அவசியம் என்று கூறிய பான் கீ மூன், அது சாத்தியமல்ல என்று மறைமுகமாக கூறுவதுபோல இவ்வாறு சொல்லியுள்ளார் :
“பன்னாட்டு சமூகத்தின் மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றால் அதற்கு முதலில் அந்நாட்டு (சிறிலங்க) அரசின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்; இரண்டாவதாக, அதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவு வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இவை இரண்டுமே சாத்தியமா?
போர் முடிந்துவிட்டது என்று அறிவித்தப் பிறகும் அந்தப் பகுதிக்கு இன்றுவரை பத்திரிக்கையாளர்களையோ அல்லது பன்னாட்டு சமூகத்தையோ அனுமதிக்காத சிறிலங்க அரசு, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஆராய எவ்வாறு ஒத்துழைப்புத் தரும்?
இரண்டாவதாக, ஐ.நா.அவை என்று பான் கீ மூன் கூறியுள்ளது ஐ.நா.வின் உயர் அதிகார அமைப்பான பாதுகாப்புப் பேரவை. அதில் உள்ள 5 நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இரஷ்யா ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
இந்த 5 வல்லரசுகளி்ல் சீனாவும், இரஷ்யாவும் (இந்தியாவைப் போல) தமிழர்களுக்கு எதிரான இந்தப் போருக்கு ஆதரவும் ஆயுதங்களும் வழங்கியவை. அதனால்தான், இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து ஒரு விவாதத்தை இன்று வரை பாதுகாப்புப் பேரவையில் நடத்த முடியாமல் தடுத்து வருகின்றன இரஷ்யாவும், சீனாவும்.
ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்திலேயே சிறிலங்க அரசிற்கு எதிராக (அதுவும் மென்மையாக) கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனாவும், இந்தியாவும் முழுமையாக ‘லாபி’ செய்து தோற்கடித்ததோடு மட்டுமின்றி, சிறிலங்க அரசு தன்னை பாராட்டி முன்மொழிந்த தீர்மானத்தை நிறைவேற்றவும் உதவின.
ஐ.நா. மனித உரிமை மன்றத்திலேயே செய்ய முடியாததையா ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் செய்ய முடியும்?
எனவே, அங்கு படுகொலை செய்யப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கையை வெளிக் கொணர வேண்டுமெனில் ஐ.நா.வில் அல்ல உலக மக்கள் ஒன்றாக கிளர்ந்தெழுந்து ஒருசேர முறையிட்டால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
ஐ.நா.அவை வளரந்த நாடுகளின் ஒரு கைப் பொம்மையே. அங்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதுதான் பான் கீ மூன் கூறியிருப்பதன் உட்பொருளாகத் தெரிகிறது.