23,000 அப்பாவி உயிர்களை பலிகொண்ட போபால் விஷ வாயுக் கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிலிருந்து பாதுகாப்பாக தப்பிச் செல்ல விட்டது காங்கிரஸ் அரசுதான் என்பது ஒரு வழியாக உறுதியாகிவிட்டது.
1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் தேதி இரவு போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சி மருந்து தொழிற்சாலையில் இருந்து மீதைல் ஐசோசயனைட் என்கிற விஷ வாயு வெளியேறி, போபால் நகரின் ஒரு பகுதியையே மரணக் காடாக்கியதற்குப் பிறகு, மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சி எந்த அளவி்ற்கு ‘அக்கரை’யுடன் செயல்பட்டது என்பது சமீப நாட்களில் அதன் தலைவர்கள் பேசிய பேச்சுகளில் இருந்து நன்றாக நாட்டு மக்கள் புரிந்துகொண்டார்கள்.
விபத்து நடந்த 3 நாட்கள் கழித்து, யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகில் மக்களிடம் உரையாற்றிய அன்றைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜூன் சிங், இந்த விபத்திற்காக யாரையும் தண்டிக்கவோ, துன்புறுத்தவோ போவதில்லை என்று கூறியதில் இருந்து, எப்படிப்பட்ட மன நிலையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
இதுமட்டுமல்ல, ஆண்டர்சனை தப்பிக்க விட்டது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் (அவர் பெயரை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை) தயாரித்துள்ள அறிக்கையில், போபாலில் அப்போது வாரன் ஆண்டர்சன் இருந்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருப்பார். அதனால் மிகப் பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்சனை உருவாகியிருக்கும் என்று கூறியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட விஷ வாயு வெளியேற்றத்திற்குக் காரணமான ஒரு நிறுவனத்தின் தலைவர் மீது பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் திரும்பும் என்பது எதிர்பார்க்கப்படுவதே. எனவே, பாதிப்பிற்குப் பொறுப்பான அந்த நபரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும் பொருட்டு, கைது செய்து சிறையில் வைப்பது கூட பாதுகாப்பு நடவடிக்கைதான் என்பதை காங்கிரஸ் கட்சி உணராமல் பேசுகிறது. ஆண்டர்சனை கைது செய்து காவலில் வைத்திருந்தால், அது விசாரணைக்கும் உதவியிருக்கும், அவருக்கும் பாதுகாப்பாக இருந்திருக்கும். ஆனால், அதையே காரணமாக்கி அவரை நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்பட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
முன்னரே அளிக்கப்பட்ட உறுதிமொழி!
எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியில் கரன் தாப்பர் நேர்காணலில், அப்போது அயலுறவு செயலராக இருந்த எம்.கே.ராஸ்கோத்ரா கூறியதுதான் உச்ச கட்ட அதிர்ச்சியாக உள்ளது.
இதுநாள்வரை, வாரன் ஆண்டர்சனை இந்தியாவி்ற்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது போல் காங்கிரஸ் கட்சி பேசிவந்தது. அவரை நாடுகடத்த அமெரிக்க மறுத்ததுபோல் கூறியும் வந்தது. ஆனால், போபால் விஷ வாயு வெளியேற்றத் துயரத்திற்குப் பிறகு இந்தியா வந்த ஆண்டர்சன், பாதுகாப்பாக நாட்டை விட்டுச் செல்வதற்கு மத்திய அரசு முன்னரே உறுதி அளித்தது என்ற உண்மையை எம்.கே.ராஸ்கோத்ரா நேற்றைய பேட்டியில் கூறியுள்ளார்.
வாரண் ஆண்டர்சன் இந்தியா வந்த போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், நடந்தது என்னவென்று நேரில் அறியவும் இந்தியா வர விரும்புகிறார். அப்படி அவர் வந்தால், எவ்வித சட்டச் சிக்கலுன் இன்றி, அவர் மீண்டும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பீர்களா என்று தன்னிடம் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் கேட்டதையும், அதனடிப்படையில் உள்துறை அமைச்சகத்துடன் பேசி, அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதையும் எம்.கே.ராஸ்கோத்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.
வாரன் ஆண்டர்சன் இந்தியா வந்து பாதுகாப்பாக மீண்டும் நாடு திரும்ப உறுதியளிக்கப்பட்டது அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தெரியப்படுத்தப்பட்டது என்றும், அதற்கு அவர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையென்றும் ராஸ்கோத்ரா கூறியுள்ளார். ஆனால், வாரன் ஆண்டர்சனை இந்தியா (போபால்) வந்ததும் கைது செய்யப்பட்டார். பிறகு பிணைய விடுதலை அளிப்பபட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு, ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த உறுதிமொழியின் அடிப்படையில், எவ்வித சிக்கலுமின்றி வெளியேறியுள்ளார்.
FILE
இதுதான் நடந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான ஒரு நிறுவனத்தின் தலைவரை, அவர் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுதலைப் பெற்றிருந்த நிலையில், நீதிமன்றத்தின் ஒப்புதலின்றி நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது மத்திய அரசே என்பதும், அது அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் ஒப்புதலுடனும்தான் நடந்துள்ளது என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபனமாகியுள்ளது.
அது மட்டுமல்ல, இந்தியா வந்த ஆண்டர்சனை கைது செய்தது தவறு என்கிறார் அன்றைய அயலுறவுச் செயலர் ராஸ்கோத்ரா! கொல்லப்பட்டது அப்பாவி மக்களென்பதால்தானே அவரால் அப்படி கூற முடிகிறது? விஷ வாயுக் கசிவு அந்த தொழிற்சாலையின் அருகில் வாழ்ந்துவந்த ஏழை, எளிய மக்களைத் தாக்கிக் கொன்றதால்தானே பாதிப்பிற்குப் பொறுபேற்க வேண்டிய நபரை கைது செய்வதற்கே எதிர்ப்பு தெரிவிக்கச் சொல்கிறது? அன்றைய மத்திய, மாநில அரசுகளும், அதன் தலைவர்களும், நிர்வாகமும் இதை ஒரு சாதாரண சாலை விபத்தைப்போலத்தான் பார்த்துள்ளன என்பதற்கு இதை விட வேறு சான்றென்ன தேவை?
இந்தியாவின் சட்டங்களும், நீதிமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டவர்களின் தன்மையைப் பொறுத்தே செயல்படுகின்றன என்று மூத்த வழக்கறிஞரும், மக்கள் சமூக உரிமைச் சங்கத்தின் தலைவருமான கண்ணபிரான் கூறியுள்ளது எவ்வளவு பெரிய உண்மை!
அந்த விஷ வாயுக் கசிவால் கொல்லப்பட்டவர்கள் மேட்டுக்குடி மக்களாக இருந்திருந்தால், அங்கு வாழ்ந்தோரில் தலைவர் எவராவது இருந்து இறந்திருந்திருந்தால், அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போது இப்படி சாதாரண ஒரு விபத்தாக பார்க்கும் மன நிலை இவர்களுக்கு இருந்திருக்குமா? அல்லது அப்படிப்பட்ட நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை சொல்லி சம்பாதிக்கத்தாம் இந்த காங்கிரஸ்காரர்கள் முன்வந்திருப்பார்களா?
ஆக, போபால் விஷ வாயுக் கசிவு சாதாரண மக்களின் வாழ்வைத் தாக்கியதால் அது ஒரு ‘விபத்தாக’ கருதப்படுகிறது. அதுவே இந்த நாட்டின் அரசியல் தலைவர்களைத் தாக்கி அழித்திருந்தால் அது தேசத்தின் அழிவாகவும், ஜனநாயகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவும் பேசப்பட்டிருக்கும். இதைத்தான் இந்திய மக்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பார்கிறது போல.
மற்றபடி, குற்றவாளிகளை, குற்றம் சாற்றப்பட்டவர்களை தப்பிக்க வைப்பதில் காங்கிரஸ் அரசை யாராலும் ஜெயிக்க முடியாது. போபர்ஸ் பீரங்கி பேர வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஒட்டோவியோ குட்ரோக்கியை ஆதாரம் ஏதுமில்லை என்று கூறி வழக்கில் இருந்தே விடுவிக்கத் தெரிந்தவர்களுக்கு, வாரன் ஆண்டர்சன்களை உறுதி மொழி கொடுத்து தப்ப வைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.