தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் என்று சிறிலங்க அரசும் அதன் தலைவர் ராஜபக்சவும் கூறியதை ‘உள்நாட்டுப் போரின்’ முடிவாக தங்கள் வசதிக்கு ஏற்றுக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட சில உலக நாடுகள், உடனடியாக தமிழர்கள் பிரச்சனைக்கு ஒரு நீடித்த அரசியல் தீர்வை சிறிலங்க அரசு உருவாக்க வேண்டும் என்று ஏதோ தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ள சிறிலங்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டிற்காகவும், அம்மக்களின் மறுவாழ்விற்காகவும் சிறிலங்க அரசிற்கு ‘எல்லா விதத்திலும்’ உதவ தாங்கள் தயார் என்றும் இந்நாடுகள் அறிவித்துள்ளன. ரூ.500 கோடியை அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட இந்த ‘சிறிலங்க ஆதரவு’ நாடுகள், இப்படிப்பட்ட அறிவிப்பின் மூலம், அந்நாடு இதுவரை மேற்கொண்ட ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையை மிக அழகாக மறைக்கும் முயற்சி என்பது மட்டுமின்றி, மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் பிரச்சனையை பயங்கரவாதத்தி்ற்கு எதிரான உள்நாட்டுப் போர் என்று கூறி, அதனை சிறிலங்க அரசு முடித்துவிட்டதை ஏதோ ஒரு பெரிய சாதனையை அந்நாட்டு இராணுவமும், அதிபரும் செய்துவிட்டதாக மனமுவந்து பாராட்டியும் உள்ளன.
TNet
TNET
ஈழத் தமிழர்களுக்கு எதிரான அந்த இறுதிப் போரின் இறுதி நாளான திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த, நாசகார ஆயுதங்களை வீசி, பாதுகாப்பு வலயப் பகுதியில் விடுதலைப் புலிகளோடு இருந்த 55,000 அப்பாவி மக்களை சிறிலங்க இராணுவம் கொன்று குவித்ததை உலக மக்களின் கண்களில் இருந்து மறைக்கவும் இந்நாடுகள் உதவியுள்ளன. ஏனென்றால் இவர்கள் யாவரும் சிறிலங்க அரசின் கூட்டாளிகளல்லவா. அந்நாட்டு அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு எல்லா விதத்திலும் உதவியவர்களல்லவா. அப்படியிருக்கும்போது இறுதியாக நடத்தப்பட்ட மனிதப் படுகொலையிலும் உள்ள தங்களின் பங்கை மறைக்க வேண்டிய கட்டாயமும், தங்களது கூட்டாளிகளை காப்பாற்ற வேண்டிய அவசியமும் ஏற்படுவது இயற்கைதானே?
விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் தீர்வா?
இலங்கையில் சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து அரசியல் மற்றும் குடிசார் உரிமைகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேலாக போராடிவரும் தங்கள் மீது முதலில் காவல் துறையைக் கொண்டும், பிறகு கால் நூற்றாண்டிற்கும் மேலாக இராணுவம் உள்ளிட்ட முப்படைகளைக் கொண்டும் இன ரீதியாக ஒடுக்கிவரும் ஒரு பயங்கரவாத அரசிடமிருந்து விடுதலைப் பெறவதே ஒரே வழி என்று முடிவு செய்த ஈழத் தமிழரின் மீது அவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு மேம்போக்கான, பலவீனமான அரசியல் தீர்வைத் திணித்து இனப் பிரச்சனையையே படுகொலை செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் முயற்சிக்கின்றன.
தங்களுடைய இராணுவ, பொருளாதார நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இந்த நாடுகளுக்கு ஈழத் தமிழர்களின் நியாயம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை விட, அவர்களை கொன்று குவித்து அவர்களின் தேசியப் பிரச்சனையையே புதைக்க முற்பட்டிருக்கும் சிறிலங்க இனவாத அரசின் நட்பும் கூட்டாண்மையும் முக்கியமாகவுள்ளது.
இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக இப்படிப்பட்ட பரஸ்பர புரிதலுடன்தான் இந்த நாடுகள் தென்னாசியாவில் தங்களுடைய நட்பு வலையை பிண்ணிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் மக்களுடைய உணர்வுகள் இந்நாடுகளில் மிதிக்கப்படுகின்றன, காவல் துறைகள் அரை இராணுவ மயப்படுத்தப்பட்டு துப்பாக்கிச் சூடுகளும், காலனி ஆதிக்க காலத்தில் பார்த்திராத அடக்குமுறைகளும், அதற்கு துணை புரியும் சட்டங்களும் அதிகமாகி வருகின்றன.
இதெல்லாம் இவர்களுக்குத் தெரியாதா?
இன்றைக்கு அரசியல் தீர்வைப் பற்றிப் பிதற்றும் இந்நாடுகளுக்கு ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டங்கள் அரை நூற்றாண்டிற்கு முன்னதாகவே துவங்கி நடந்ததும், அதற்கு தமிழினத்தின் மரியாதைக்குரிய தலைவரான செல்வநாயகம் தலைமையேற்று வழிநடத்தியதும், அதன் காரணமாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதும், பிறகு அவைகள் நாடாளுமன்ற வாயிலிலேயே கிழித்தெறியப்பட்டதும் தெரியாதா?
இலங்கை விடுதலைப் பெறுவதற்கு முன்னரும், 1948இல் அது விடுதலைப் பெற்றப் பின்னரும் இப்படி சாத்வீக வழியில் நடந்த போராட்டங்களை சிறிலங்க அரசு தனது காவல் துறையினரை ஏவி ஒடுக்கியதும், அவர்களோடு சிங்கள இனவெறி காடையர்கள் சேர்ந்து கொண்டு தமிழர் தலைவர்களை தாக்கியதும் தெரியாதா?
இதனையெல்லாம் செய்தது அடுத்தடுத்து அந்நாட்டின் அதிபர்களாக, பிரதமர்களாக வந்த சிங்கள அரசியல் தலைவர்கள் என்பதும், அவர்களை சிங்கள மேலாதிக்க வெறியும், சிங்கள பெளத்த சித்தாந்தமும், பெளத்த மடாதிபதிகளும் தூண்டி விட்டதும்தான் காரணம் என்பது தெரியாதா?
இப்படி சாத்வீக வழிகளில் போராடி தமக்குரிய அரசியல், ஜனநாயக சம உரிமைகளை பெற முடியாது என்பதை தெளிவாக உணர்ந்த பின்னரே வட்டுக்கோட்டையில் மாநாட்டைக் கூட்டி, தனித் தமிழ் ஈழமே நாம் எதிர்பார்க்கின்ற கண்ணியமான, பாதுகாப்பான வாழ்விற்கு ஒரே உத்தரவாதம் என்று தீர்மானம் நிறைவேற்றினரே செல்வநாயகம் உள்ளிட்ட தமிழர் தலைவர்கள்? இது தெரியாதா?
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் காங்கேசன் துறையில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்று சிறிலங்க நாடாளுமன்றத்திற்குச் சென்றதும், 1977இல் நடந்த தேர்தலில் அதே கோரிக்கையை முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழர் பகுதிகளில் முழுமையான வெற்றியைப் பெற்றதும் இவர்களுக்குத் தெரியாதா?
webdunia photo
FILE
தமிழர்களின் சாத்வீக போராட்டங்கள் எல்லாம் காவல் துறையால், பிறகு இராணுவத்தால் ஒடுக்கப்பட்டப் பின்னர்தானே ஈழத்து இளைஞர்கள் ஆயுதத்தை எடுத்தார்கள். ஆயுதப் போராட்டம் துவங்கிய பின்னர் தானே இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டன. ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்துதானே அவர்களோடு பேச்சு நடத்துமாறு சிறிலங்க அரசை இந்தியா ‘கேட்டுக் கொண்டது’ம் திம்புவில் பேச்சுவார்த்தை நடந்ததும், அப்போது போராளிகள் வெளியிட்ட கூட்டுப் பிரகடணம் ஈழத் தமிழர்களின் குரலாக அல்லவா ஏற்கப்பட்டதே, அது தெரியாதா?
அன்றைக்கெல்லாம் ஆயுதம் தாங்கிய போராட்டம் பயங்கரவாதமாக இந்தியாவின் கண்களுக்குத் தெரியாமல் போனது ஏன்? இன்றைக்கு அதனை பயங்கரவாதமாக சித்தரிப்பது ஏன்? எந்த நீதிமன்றத்தால் அல்லது ஐ.நா.வின் எந்த அமைப்பால் இந்த விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் என முத்திரைக் குத்தப்பட்டது? ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அல்லவா அந்த முத்திரை குத்தப்பட்டது? இது நமக்குத் தெரியாதா?
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட வலிமையின் காரணமாகத்தானே 2002ஆம் ஆண்டில் போர் நிறுத்தத்திற்கு சிறிலங்க அரசு சம்மதித்தது? பாங்காக்கில் இருந்து ஜெனிவா வரை பேச்சுவார்த்தை நடத்தியது, இது தெரியாதா?
இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொண்ட எதையாவது சிறிலங்க அரசு நிறைவேற்றியது என்று இன்றைக்கு அந்நாட்டை அரசியல் தீர்வு காண் என்று அன்புடன் கேட்கும் இந்தியா உள்ளிட்ட எந்த நாடாவது கூற முடியுமா?
ஆக 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து 2006ஆம் ஆண்டு தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொள்ளும் அந்த இடைப்பட்ட காலத்தில் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக ஏதாவது ஒரு திட்டத்தை சிறிலங்க அரசு வைத்துள்ளது என்று கூறமுடியுமா?
webdunia photo
FILE
1987 இராஜீவ் காந்தி - ஜெயவர்தனே ஒப்பந்தம் தமிழர்களின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டதும் அல்ல, அது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு விடை கூறியதும் அல்ல. அது தனது மேலாதிக்க செல்வாக்கைக் கொண்டு தமிழர்களின் மீது இந்தியா திணிக்க முற்பட்ட ஒன்று என்பதனால்தானே தமிழர்களும் எதிர்க்கின்றனர், சிங்களர்களும் எதிர்க்கின்றனர். மிகக் குறைந்த பட்ச அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் அந்த ஒப்பந்தத்தைக் கூட எதிர்க்கும் சிங்களமா தமிழர்க்கு சம உரிமை அளிக்கப் போகிறது?
எனவே எந்த ஒரு கால கட்டத்திலும் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு சம உரிமையுடன் கூடிய ஒரு சமாதான தீர்வு திட்டத்தை முன்வைத்து பேச வராத சிறிலங்க அரசை, விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்குவதன் மூலம் தமிழர் எதிர்ப்பின் ஆணி வேரை அழித்திட முடியும், அதன் பிறகு நாம் வைத்துதான் தீர்வு என்று கருதும் அப்பட்டமான அநாகரீக சிறிலங்கத் தலைமை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்குத்தான் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற தென்னாசிய நாடுகள் தங்களுக்கிடையிலான பகைமையை மறந்து ஆதரித்தன.
ஆயுத ரீதியாக உதவின, இராணுவ தந்திரங்களை போதித்தன. அதற்கு எதிரான உலக நாடுகளின் குரலை ‘பரஸ்பர நலனை சொல்லி’ திசை திருப்பின. இனப் படுகொலை என்ற முத்திரை விழாமல் சிறிலங்க அரசைக் காத்தன. இந்த நாடுகள் அளித்த ஆதரவும், உதவியும்தான் துணிச்சலான ஒரு இனப் படுகொலை நடத்த சிறிலங்க இராணுவத்திற்கு உதவியது.
webdunia photo
FILE
மூன்றரை இலட்சம் மக்கள் போரினால் துரத்தப்பட்டு கடந்த 8 மாதங்களாக இடம் பெயர்ந்து, இடம் பெயர்ந்து சொல்லொணா துயரத்தை அனுபவித்தபோது அதனை மனிதாபிமான பிரச்சனை என்று மட்டுமே கூறி, இனப் படுகொலை நடப்பதை திட்டமிட்ட பிரச்சாரத்தால் திசை திருப்பியது மட்டுமின்றி, அம்மக்களை பட்டினி போட்டு சிங்கள அரசு சாகடித்தபோதும் கண்டனத்தோடு அமைதி காத்த தார்மீக நெறிகளை மதிக்கும் நாடுகள் இவை.
வன்னிப் பெரு நிலத்திலேயே, தாங்கள் வாழ்ந்த சொந்த பூமியிலேயே அவர்கள் ஏதிலிகளாக திரிவதை மானுட அவலம் என்றுரைத்து, அதனை தடுத்து நிறுத்த இந்த நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தால், இராணுவ நடவடிக்கையிலும், நோயிலும், பட்டினிச் சாவிலும் சற்றேறக்குறைய ஒரு இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்களா?
பாதுகாப்பு வலயம் என்று கூறி, அப்பகுதி வரவழைத்து அவர்களுக்கு சோறு, தண்ணீர் கொடுக்காதது மட்டுமின்றி, சதா சர்வ நேரமும் அவர்கள் மீது குண்டு வீசி கொன்று குவித்ததை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று இந்த நாடுகளும், இவைகளின் குத்தகையில் சிக்குண்டுள்ள ஐ.நா.வும் கருதியதால்தானே கடந்த திங்கட்கிழமை 2 சதுர கி.மீ. பரப்பில் இருந்த 55,000 அப்பாவி மக்களை சக்தி வாய்ந்த குண்டுகளை போட்டு நிர்மூலமாக்கியது சிறிலங்க இராணுவம்? இதனை இந்த நாடுகளால் மறுக்க முடியுமா?
“அந்த இடத்தில் மனிதர்கள் வாழ்ந்த தடயமே இல்லை, முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது” என்று ஐ.நா.பொதுச் செயலரின் தலைமை அலுவலர் கூறிய பின்பும், என்ன நடந்தது அங்கு என்று சிறிலங்க அரசை நோக்கி கேள்வி கேட்காத நாடுகளல்லவா இவை.
ஆக, மாபெரும் படுகொலை நடத்தி முடிக்கப்பட்டதை அறிந்தும், அதன் விவரங்களை வெளியிடாமல் இன்றுவரை மறைப்பது மட்டுமின்றி, அந்த இடத்திற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ அல்லது ஊடகங்களையோ அனுமதிக்காமல் உண்மையை புதைக்கும் சிறிலங்க அரசின் நடவடிக்கைக்கு துணை போய்க்கொண்டு, அதனிடமே அரசியல் தீர்வை உருவாக்கு என்று கூறுவது யாரை ஏமாற்ற?
அமைதித் தீர்வு, அரசியல் தீர்வு என்பதற்கான காலமெல்லாம் மறையேறிவிட்டது. அங்கு அமைதி நிரந்தரமாக ஏற்பட வேண்டுமெனில் விடுதலை மட்டுமே ஒரே வழி. சிங்களம் நடத்திய இன வெறித் தாண்டவத்தில் அந்த விடுதலைக்கான காரணமும், வேட்கையும் மேலும் தீவிரப்பட்டுள்ளது என்பதே உண்மை.
தென்னாசிய நாடுகளின் முழுமையான உதவியுடன் இரண்டரை ஆண்டுக் காலம் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப் படுகொலையை கண்ட பிறகு தமிழினம் - ஈழத்தில் மட்டுமல்ல, அதன் தொப்புள் கொடி உறவாக உலகெங்கும் பரவியுள்ள தமிழினம் - முன்பை விட அதிகமாக, ஆழமாக உணர்ந்துள்ளது: தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு.
TNet
TNET
ஊனமுற்று முடங்கிக் கிடக்கிறது ஈழத் தமிழினம். கால்கள் ஒடிந்து ஓய்ந்து கிடக்கிறது அதன் விடுதலை இயக்கம். ஆனால் உலகெங்கும் தமிழர்கள் இதையெல்லாம் இரத்தம் கசியும் இதயத்தோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்றிணைந்து செயல்பட்டு அந்த நியாயத்தை உலகின் ஆதரவோடு அவர்கள் வென்றெடுப்பார்கள்.
சுதந்திர வேட்கை அடங்கியதாகவோ அல்லது விடுதலைப் போராட்டம் தோற்று மறைந்ததாகவோ இதுவரை வரலாற்றில் ஏதுமில்லை, இனியும் வாராது.