ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தமிழ்நாட்டையும், குஜராத்தையும் ஒப்பிட்டு பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. என்றாலும் அடுத்த சீசனுக்கான பயிற்சியாக இதை எடுத்துக் கொள்வதாக கேப்டன் தோனி சொன்னபோது, தல சொல்லே மந்திரம் என அதை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் சிஎஸ்கேவை தொடர்ந்து ஆதரித்தனர். அதற்கேற்ப ஆறுதலாக கடைசி போட்டியில் டாப் ரேங்கரான குஜராத் அணியை சிஎஸ்கே பந்தாடியது.
இந்நிலையில் சென்னை ரசிகர்கள் குறித்து ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். அதில் அவர் “சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள் என இங்கு வந்தபோது உணர்ந்து கொண்டேன். இவர்களோடு ஒப்பிடுகையில் குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவே. சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர்களது பணிவான குணம்தான். வெற்றியோ, தோல்வியோ அவர்களது அன்பு என்றும் குறையாது. ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை” என்று பேசியுள்ளார்.
சென்னை மக்களை புகழ்ந்து பேசிய ஜடேஜா அதேசமயம் குஜராத்தை கோதாவில் இழுத்து விட்டு வெளுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதிக் கொண்டது. இந்த போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. அப்போது ஜடேஜா 22 பந்துகளில் 9 ரன்களே அடித்து வெளியேறியபோது அங்கிருந்த ரசிகர்களால் நேரடியாக விமர்சிக்கப்பட்டார். அதை மனதில் வைத்துதான் குஜராத்தை ஜடேஜா தாக்கி பேசியுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K