ஒவ்வொரு எம்.பி.,யும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது, இந்த திட்டத்தின் படி சச்சின் டெண்டுல்கரும் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த புட்டம்ராஜு கண்டிகை கிராமத்தை தத்தெடுத்தார். சாலை வசதி, மருத்துவ வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமாக இருந்த புட்டம்ராஜூ கண்டிகாவை, எல்லா வசதியும் பெற்று அழகிய முன்மாதிரி கிராமமாக மாற்ற சச்சின் முடிவு செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை சச்சின் அந்த கிராமத்தில் மேற்கொண்டார்.
அதன்படி, இந்த கிராமத்தில் கான்கிரீட் சாலைகள், சுற்றிலும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு ஆழகான கிராமமாக மாற்றினர். மேலும், பாதாள சாக்கடைத் திட்டம், 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கிராமத்தினர் உடல் நலனை கருத்தில் கொண்டு அந்த கிராமத்தில் எல்லா வசதியும் கூடிய மல்டி பெஸ்லிடி மருத்துவமனை, குழந்தைகள் கல்வி கற்க அனைத்து வசதியும் கூடிய பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இதுதவிர கிராமத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு அவைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.