ரொம்ப தேங்க்ஸ் மாப்ள..! சுப்மன் கில்-க்கு நன்றி சொன்ன சச்சின்! - காரணம் இதுதான்!

திங்கள், 22 மே 2023 (09:08 IST)
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியை குஜராத் டைட்டன்ஸ் வென்ற நிலையில் சச்சின் டெண்டுல்கரின் நக்கல் ட்வீட் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ப்ளே ஆப் செல்லும் கடைசி அணி எது என்பதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று சன்ரைஸர்ஸ்க்கு எதிரான மேட்ச்சில் ஜெயித்தாலும், ஆர்சிபி தோற்றால்தான் ப்ளே ஆப் செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் மும்பை அணி இருந்தது.

இந்நிலையில் மழை காரணமாக தாமதமாக தொடங்கிய ஆர்சிபி – குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். ஆர்சிபியின் இந்த தோல்வியால் மும்பை அணிக்கு ப்ளே ஆப் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட சச்சின் “கேமரூன் க்ரீன், சுப்மன் கில் மும்பை அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்தனர். மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் விளாசி நன்றாக விளையாடினார்” என்று கூறியுள்ளார்.

நேற்று மும்பை அணி வெற்றி பெற மும்பை அணி வீரர் கேமரூன் க்ரீன் அடித்த சதம் காரணம் என்றாலும், ஆர்சிபி தோற்று மும்பை அணி ப்ளே ஆப் செல்ல சுப்மன் கில் அடித்த சதம் காரணம் என்பதை மறைமுகமாக நக்கலாக சொல்லியுள்ளார் சச்சின்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்