இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்க தோனி தான் சரியானவர் - ராகுல் டிராவிட்

வியாழன், 17 ஜூலை 2014 (17:24 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்க தோனி தான் சரியானவர் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் சமீபத்தில் முடிந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 
 
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், 'இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து தோனியை விலக்கிவிட்டு அந்த பதவியை விராட் கோலிக்கு கொடுக்கலாம்.
 
டி20, ஒருநாள் போட்டிகளுக்கு சிறந்த கேப்டனாக இருக்கும் தோனி டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை நிச்சயமாக சிறந்த கேப்டன் இல்லை எனக் கூறியிருந்தார்.
 
இதற்கு லண்டனில் இருந்து பதில் அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணி 2011–12 ஆண்டுகளில் சந்தித்த தோல்வியைப் பற்றி பேசுகிறார்கள்.  
 
ஆனால் தற்போதைய இளம் அணியை தோனி சிறப்பாக வழி நடத்துகிறார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்க தோனி தான் சரியானவர். அவருடைய தலைமையின் கீழ் இந்திய அணி முன்னேறி சென்றுள்ளது. விராட் கோலி கேப்டனாக இன்னும் சரியான நேரம் வரவில்லை. கேப்டன் பதவியில் இருந்து தோனியை மாற்றவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்