“பயிற்சியாளர்கள் டக் அவுட்டில் மட்டுமே இருக்க வேண்டும்…” கம்பீர் செயலுக்கு இங்கிலாந்து வீரர் கண்டனம்!

சனி, 6 மே 2023 (08:00 IST)
லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர்.  பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர்.

இருவரும் வாக்குவாதத்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன்படி கோலியிடம் கம்பீர், “நீ என் அணி வீரர்களை அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என்பது என் குடும்பம் போன்றது. உன் வார்த்தைகள் என் குடும்பத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது” எனக் கூற, அதற்கு கோலி “உங்கள் குடும்பத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மோதல் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன், “வீரர்கள் களத்தில் மோதிக்கொள்வதை பெரிதுபடுத்த தேவையில்லை. ஆனால் அப்படி மோதல் எழும்போது பயிற்சியாளர்கள் அதை தடுத்து சமாதானம் செய்ய வேண்டும். பயிற்சியாளர் அல்லது பயிற்சியாளர் அணியில் இருப்பவர்கள் இப்படி நடந்துகொள்வது கண்டிக்க வேண்டியது. பயிற்சியாளர்கள் டக் அவுட்டில் இருந்து வியூகங்களை மட்டுமே வகுத்துக் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்