இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் அணி கேப்டனாக மலிங்கா நியமனம்!

வியாழன், 24 ஏப்ரல் 2014 (10:09 IST)
20 ஓவர் உலகக் கோப்பையை மலிங்கா தன் தலைமையில் வென்றுள்ளதையடுத்து இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேட்பனாக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கை கிரிக்கெட் அணி மே மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதையொட்டி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு கூட்டம் கொழும்பில் நேற்று நடந்தது. 
 
இதில் 20 ஓவர் போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் சன்டிமாலை நீக்கி விட்டு புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு வரை மலிங்கா 20 ஓவர் அணியின் கேப்டனாக தொடருவார். 
 
இதேபோல் அதே கால கட்டம் வரை ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இலங்கை அணியின் துணை கேப்டனாக திரிமன்னே இருப்பார் என்றும் தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் 2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டி வரை ஒருநாள் அணியின் கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூஸ் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்