தோனியை விட ரவி சாஸ்திரி, கவாஸ்கருக்கு அதிக சம்பளம்

செவ்வாய், 14 அக்டோபர் 2014 (13:14 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை விட ரவி சாஸ்திரி, மற்றும் கவாஸ்கர் அதிக சம்பளம் பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
கவாஸ்கர், ரவிசாஸ்திரி இருவரும் இந்த ஆண்டில் ரூ.6 கோடிக்கு மேல் பிசிசிஐ-யிடம் இருந்து சம்பளமாக பெற்றுள்ளனர். ரவி சாஸ்திரி, கவாஸ்கர் ஆகியோர் பிசிசிஐ யால் வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.4 கோடியை பிசிசிஐ வழங்குகிறது.
 
இது தவிர இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியை நடத்தும் பொறுப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கவாஸ்கரிடம் அளிக்கப்பட்டது. இதற்காகவும் அவருக்குக் கூடுதலாக 2 கோடிக்கும் மேல் சம்பளம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
அதே போல், ரவி சாஸ்திரி 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைவரை இந்திய அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காகவும் அவருக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
 
அதே நேரத்தில் இந்த சம்பளத்தொகை, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு பிசிசிஐ கொடுக்கும் சம்பளத்தை விட அதிகமாகும்.
 
கடந்த 12 மாதங்களில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் என மொத்தம் 35 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள தோனிக்கு பிசிசிஐ ரூ.2.59 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்