அழுக்கு மூட்டை திமுக, துரோகம் செய்த காங்கிரஸ்: அது வேற வாய், இது நார வாய்...!

அ.கேஸ்டன்

திங்கள், 15 பிப்ரவரி 2016 (13:37 IST)
கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. பத்து வருடத்துக்கு மேல நீடித்த இந்த கூட்டணி பந்தம், தொடர் குற்றச்சாட்டுகள், ஊழல் கறைகள், வெறுப்பு, வழக்குகள் போன்ற பிரச்சனைகளால் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பிரிந்தது.


 
 
ஆனால் இந்த கூட்டணி பிரிவு ரொம்ப நாள் நீடிக்கவில்லை. இரண்டு வருடங்களில் மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் பிரியும் போதே தெரியும், மீண்டும் இவர்கள் சேருவார்கள் என்பது. பத்து வருட உறவாச்சே எப்படி இவர்களால் பிரிந்து இருக்க முடியும்.
 
பிரிந்த இவர்கள் சேருவார்கள் மீண்டும் சேர்வார்கள் என என்னைப் போன்றோருக்கு தெரியும், ஆனால் இவர்கள் நினைத்தார்களா? மீண்டும் சேருவோம் என. இவ்விரு கட்சிகளின் சந்தர்ப்ப அரசியலுக்கு இதை விட வேறு உதாரணம் இருக்க முடியாது.
 
கூட்டணி பிரிந்த போது, இவ்விரு கட்சி தலைவர்களும் என்னென்ன பேசினார்கள் என அவர்கள் மறந்திருக்கலாம், மறந்துவிட்டது மாதிரி நடிக்கலாம். ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்.
 
கூட்டணி பிரிந்த போது திமுக தலைவர் கருணாநிதி கூறியது:- நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள் அவர்கள். பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் திமுக-வை சிக்க வைத்து விட்டார்கள். அதனாலேயே கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள். இப்படி கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசினார் திமுக தலைவர் கருணாநிதி.


 
 
இப்படி, தன் மகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, களங்கம் விளைவித்த காங்கிரசோடு ஏன் கூட்டணி வைக்கிறார் இந்த பாசக்கார தந்தை. கட்சிக்கு களங்கம் விளைவித்ததை, தயாளு அம்மாளுக்கு துயரம் ஏற்படுத்தியதை மறந்து விட்டாரா கருணாநிதி?.

 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....

கூட்டணி கிடையாது என்ற கருணாநிதியின் அறிவிப்பால், பெரிய சுமை நீங்கி விட்டதாகக் கருதுகிறோம் என்றார் இளங்கோவன். அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட கறை நீக்கப்பட்டதாக உணருகிறோம். மறுபடி சமரசம் கிடையாது. காங்கிரசுக்கு சுயமரியாதை இருக்கிறது. திமுக தான் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி திமுக அரசு ஐந்து ஆண்டு காலம் ஆட்சி நடத்தியது.


 
 
திமுக, காங்கிரசை குற்றம் சொல்வது, பாஜக-வுக்கு ஒத்து ஊதுவது போல் உள்ளது. இந்த அழுக்கு மூட்டையை முதுகில் சுமக்க, பாஜக தயாராக இருக்காது. ஊழல் கறை படிந்த, திமுக-வை, பாஜக சேர்ப்பது சந்தேகம் தான். திமுக, காங்கிரஸ் கூட்டணி பிரிந்தவுடன் இப்படி பேசியவர் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்.
 
மீண்டும் திமுக-வுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரசுக்கு இப்பொழுது சுயமரியாதை இல்லையா?. அன்று திமுக என்ற அழுக்கு மூட்டையை பாஜக சுமக்காது என்று கூறிய நீங்கள், இப்பொழுது இந்த அழுக்கு மூட்டையை தேடி சென்று சுமப்பது ஏன்?.
 
தேர்தலுக்கு தேர்தல், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நீங்கள் இப்படி மாற்றி மாற்றி பேசுவதை பார்க்கும் போது, அது வேற வாய், இது நார வாய் என்ற சினிமா காமெடி தான் நினைவுக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்