செக்ஸை மையப்படுத்திய படம் - ராம் கோபால் வர்மாவின் அடுத்த அதிரடி

செவ்வாய், 15 ஜூலை 2014 (02:19 IST)
ரவுடி, பட்டா பகலு, ஐஸ்க்ரீம் என்று தெலுங்கில் தொடர்ந்து படங்கள் இயக்கிய ராம் கோபால் வர்மா மீண்டும் இந்திக்கு திரும்புகிறார். படத்தின் பெயர் XES. 


 
இந்திய சினிமாவில் வர்மாவின் இடம் தனித்துவமானது. அவரின் கேங்ஸ்டர் நிழலுலகப் படங்கள் இந்திப் படவுலகின் முகத்தை மாற்றின. இன்று இந்தி சினிமாவின் நியூ ஜெனரேஷன் படங்களில் பங்களிப்பு செய்யும் எண்பது சதவீதத்தினர் ஏதாவது ஒருவகையில் வர்மாவுடன் தொடர்புடையவர்கள். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அல்லது ஊக்கப்படுத்தப்பட்டவர்கள்.
 
நிழலுலக படங்கள் மட்டுமின்றி அனைத்து வகைகளிலும் பரிசோதனை முயற்சி மேற்கொண்டிருக்கிறார் வர்மா. ஹாரர், ரொமான்டிக் வகைகளிலும் படங்கள் எடுத்துள்ளார். ஒருகட்டத்தில் படங்கள் எடுப்பது மட்டுமே வர்மாவின் ஒரே நோக்கமாகிப் போனது. அவர் சொல்வதைப் போல, "ஒரு படத்தை எடுப்பதில்தான் என்னுடைய ஈடுபாடு மகிழ்ச்சி எல்லாம் இருக்கிறது. அது வெற்றி பெறுமா இல்லையா என்பதெல்லாம் குறித்து நான் கவலைப்படுவதில்லை."
 
இந்த கொள்கை காரணமாக இரண்டு மாதத்துக்கு ஒரு படம் வர்மாவிடமிருந்து வெளியானது. ஆனால் 2008 -ல் வெளியான சர்க்கார் ராஜுக்குப் பிறகு ஒரு படமும் வெற்றி பெறவில்லை. அதுபற்றி அவர் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.
 
இந்நிலையில் மூன்று தெலுங்குப் படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திக்கு வந்துள்ளார். இந்தமுறை அவர் இயக்கப் போகும் படம் எரோடிக் வகையைச் சேர்ந்தது. படத்தின் பெயர் XES. பல்வேறு சிச்சுவேஷன்களில் செக்ஸ் எப்படி செயலாற்றுகிறது என்பதை குறித்து இந்தப் படத்தில் சொல்லப் போகிறாராம். இதுவரை தான் இயக்கிய படங்களில் கையாண்ட கருப்பொருளை மறு கண்டுபிடிப்பு செய்யும் முயற்சியின் முதல் படமாக இது இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
 
வர்மா இஸ் பேக். தொடர் தோல்விகளை தருகிறவர் என்றாலும் வர்மாவை உற்று நோக்க ஆரம்பித்துள்ளது பாலிவுட்.

வெப்துனியாவைப் படிக்கவும்