இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு கேரளாவின் இளம் எம்.எல்.ஏவுடன் திருமண ஏற்பாடு!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:34 IST)
(இன்று (17-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்)
 
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகர மேயர் எஸ். ஆர்யா ராஜேந்திரன், பாலுச்சேரி எம்.எல்.ஏ சச்சின் தேவ் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக ' தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
 
22 வயதாகும் ஆர்யா, இந்தியாவின் இளம் மேயராவார். 28 வயதாகும் சச்சின் தேவ் கேரள சட்டமன்றத்தில் இளம் எம்.எல். ஏ ஆவார். இருவரும் பால சங்கம் மற்றும் எஸ்.எஃப்.ஐ அமைப்புகளில் பணியாற்றிய நாட்களில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதுகுறித்து பேசிய சச்சின் தேவ், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. திருமண தேதி உட்பட மற்ற முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.
 
ஆர்யா பேசுகையில், "நாங்கள் இந்திய மாணவர் சங்கத்தில் (எஸ்.எஃப்.ஐ.) ஒன்றாகப் பணியாற்றிய நாட்களில் இருந்தே நண்பர்களாக இருக்கிறோம். இரு குடும்பங்கள் ஆரம்ப கட்டமாக பேசி வருகின்றனர். மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இது ஒரு சாதாரண திருமண முன்மொழிவுதான்." என்று அவர் கூறினார்.
 
கோழிக்கோடு நெல்லிக்கோடு பகுதியைச் சேர்ந்த சச்சின் தேவ், முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்