பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வு என்ன - உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவர கோரிக்கை!

புதன், 19 ஜனவரி 2022 (10:24 IST)
சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் அறிக்கை, பிளாஸ்டிக் மாசுபாடு உண்டாக்கியுள்ள உலகளாவிய அவசரநிலை நெருக்கடி, வலுவானதோர் உடன்படிக்கையை ஐ.நா கொண்டுவரவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.
 
சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் ( Environmental Investigation Agency), பிளாஸ்டிக்கால் ஏற்படும் கேடுகளுக்கான ஆதாரங்கள் உள்ளன என்கிறது.
 
பிளாஸ்டிக் மாசுபாட்டின் அச்சுறுத்தல் காலநிலை நெருக்கடிக்குச் சமமானது என்றும் அந்த நிறுவனம் வாதிடுகிறது.
இப்போது நாம் சுவாசிக்கும் காற்றில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் உள்ளன. ஆர்டிக் பனியில் பிளாஸ்டிக் உள்ளது. மண்ணிலும் நமது உணவிலும் கூட பிளாஸ்டிக் உள்ளது.
 
உதாரணமாக, தாய்லாந்தில் குப்பைக் கிடங்கிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சாப்பிட்டு சுமார் 20 யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அதன் கழிவுகள் இரண்டையும் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த இலக்குகளோடு ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையை ஏற்று, கொண்டுவர வேண்டுமென இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர் உலக நாடுகளை வலியுறுத்துகிறார்.
 
"கொடிய அபாயங்களை நோக்கி, நேரம் வேகமாகக் குறைந்து வருகிறது," என்று சுற்றுச்சூழல் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த டாம் கேம்மேஜ் கூறினார்.
 
"இந்த மாசுபாட்டு அலை, கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தால், 2040-ஆம் ஆண்டில் கடலில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் அளவு குறித்த கணிப்பின்படி, கடலிலுள்ள அனைத்து மீன்களின் மொத்த எடையைவிட பிளாஸ்டிக்கின் அளவு அதிகமாக இருக்கும்."
 
"ஐக்கிய நாடுகள் சபை, உயிர்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மூன்று சூழலியல் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டுள்ளது. காலநிலை மாற்றம், பல்லுயிரிய இழப்பு மற்றும் மாசுபாடு ஆகிய அந்த மூன்றுமே ஒன்றாகத் தீர்க்கப்படவெண்டும் என்றும் முடிவு செய்துள்ளது.
 
பல்லுயிர் இழப்பு மற்றும் காலநிலை தொடர்பான பலதரப்பு ஒப்பந்தங்கள், அவை கரிம உமிழ்வைத் தடுக்க அல்லது இயற்கை உலகைப் பாதுகாக்கத் தவறினாலும், ஏறக்குறைய 30 ஆண்டுகளாக உள்ளன.
பிரத்யேக பிளாஸ்டிக் ஒப்பந்தம் என்ற யோசனையை சமீபத்திய ஆண்டுகளில் சில நாடுகள் எதிர்த்தன.
 
ஆனால், பிரிட்டன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐ.நா சுற்றுச்சூழல் சபையில் முன்மொழியப்படும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இந்த ஒப்பந்தம் எவ்வளவு கண்டிப்பானதாக இருக்கவேண்டும், அது சட்டபூர்வமாக கட்டாயமானதாக இருக்க வேண்டுமா அல்லது அரசுகள் தாமாக முன்வந்து நிறைவேற்றுவதாக இருக்கவேண்டுமா என்பதில் சச்சரவுகள் இருந்தாலும், வெளிப்படையான எதிர்ப்பு வலுவிழந்து வருவதாக தொடர்புகள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்த உலகளாவிய உடன்படிக்கைக்கு தற்போது அமெரிக்கா ஆதரவளிப்பதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
 
இருப்பினும், பெரும்பாலான பிளாஸ்டிக்குள் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் இருந்து தயாரிக்கப்படுவதால் (அவை இரண்டுமே அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன), அவர் காங்கிரஸின் (அமெரிக்க நாடாளுமன்றம்) ஒப்புதலைப் பெறமுடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
இந்த ஒப்பந்தத்தின் இலக்கைக் குறைக்க ஜப்பான் முயல்வதாகக் கூறப்படுகிறது. அரபு வளைகுடா நாடுகளும் சீனாவும் இதுவரை மௌனமாகவே இருக்கின்றன. அமெரிக்காவும் பிரிட்டனும் தனிநபருடைய கழிவு உற்பத்தியை அதிகமாகச் செய்வதாகக் கூறப்பட்டாலும், சீனா, தூய பாலிமரில் தயாரிக்கப்படும் விர்ஜின் பிளாஸ்டிக்கை, மிகவும் அதிகமாக உற்பத்தி செய்கிறது.
 
சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனத்தின் (EIA), அறிக்கையை வெளியிட்டுப் பேசியபோது, "பிளாஸ்டிக் மாசுபாட்டின் வெளிப்படையான தன்மை பொதுமக்களின் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான பிளாஸ்டிக் மாசு பாதிப்புகள் கண்ணுக்குத் தெரியாதவை.
 
பிளாஸ்டிக்கின் அதிகப்படியான உற்பத்தி மற்றும் அவற்றின் வாழ்க்கை சுழற்சியால் ஏற்படும் சேதம் மீள முடியாதது. இது மனித நாகரிகத்திற்கும் பூமியின் உயிர் வாழக்கூடிய சூழலைத் தக்கவைக்கும் திறனுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைப் போலவே தீவிரமடைந்து வருகிறது," என்றார்.
 
பிளாஸ்டிக் பற்றிய அதிகாரமுடைய பிளைமவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா.ரிச்சர்ட் தாம்சன், ஐநா ஒப்பந்தம் பிளாஸ்டிக்கின் முழு வாழ்க்கை சுழற்சியுடைய பகுப்பாய்வில் கவனம் செலுத்தவேண்டும் என்று பிபிசியிடம் கூறினார்.
 
மேலும், "பிரச்னைக்கான அடிப்படைக் காரணம், உற்பத்தி மற்றும் நுகர்வு நிலைகலில் நீடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.
 
"மறுசுழற்சி செய்யக்கூடிய' பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை ஆதரிப்பது, அந்த பிளாஸ்டிக்குகளை சேகரிக்கவும் பிரிக்கவும் மறுசுழற்சி செய்வதற்கும் ஓர் உள்ளூர் உள்கட்டமைப்பு இல்லாவிட்டால், பயனுள்ளதாக இருக்காது.
 
'மக்கும்' பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகள், அதன்மூலம் உருவாகும் கழிவுகளைக் கையாள பொருத்தமான உள்ளூர் உள்கட்டமைப்பு இருந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
 
பிரிட்டிஷ் பிளாஸ்டிக் சம்மேளனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், "பிளாஸ்டிக் ஓர் இலகுரக, பாதுகாப்பான மற்றும் ஆற்றல் திறனுள்ள பொருளாகும். மேலும், அதை வெறுமனே மாற்றுப் பொருளைக் கொண்டுவருவதன் மூலமாக மாற்றுவது, எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகளையும் அதோடு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கான மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
 
"உலகெங்கிலும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகல் கழுவப்படும் துரதிர்ஷ்டவசமான காட்சிகள் பல பகுதிகளில் முறையற்று நிர்வகிக்கப்படுவதன் நேரடி விளைவாக, பிளாஸ்டிக் கழிவுகள் கடல் பகுதிகளுக்குச் சென்று சேர்வது இருக்கிறது. மேலும், நாம் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பினால், இங்குதான் கவனம் செலுத்தவேண்டும்."
 
நியூசிலாந்தில் உள்ள மாஸ்ஸி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் ஆராய்ச்சியாளர் டிரீயா ஃபாரெல்லி, பிபிசியிடம் பேசியபோது, பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களுக்கான உபபொருட்களை உற்பத்தி செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பிளாஸ்டிக் உற்பத்தியை விட பிளாஸ்டிக் கழிவுகளில் கவனம் செலுத்த முயல்வதாகக் கூறினார்.
 
அவர் மேலும், "இப்போதுள்ள கேள்வி என்னவெனில், அந்த ஒப்பந்தம் எப்படி இருக்கும்? கடலிலுள்ள குப்பைகல் மற்றும் கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தும் பலவீனமான வடிவமாக இருக்குமா அல்லது பாரம்பர்ய மாசுபாட்ட சரிசெய்வதன் மூலம், பிளாஸ்டிக்கின் முழு வாழ்க்கை சுழற்சியைப் பிரித்தெடுத்தல் மற்றும் உற்பத்தி செய்யும் உரிமையை உள்ளடக்கிய தீர்மானமாக இருக்குமா?" என்கிறார்.
 
பிளாஸ்டிக்கின் நச்சுத்தன்மையைத் தீர்மானிக்க இன்னும் அறிவியல் தேவை என்று ஒப்புக்கொண்டவர், அதனால் தாமதப்படுத்துவது ஆபத்தானது என்றும் வாதிடுகிறார்.
 
"பல்வேறு பிளாஸ்டிக் மாசுபாடு பாதிப்புகளில், ஒப்பீட்டளவில் அறிவியல் புதியதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது.
 
ஆனால், பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும், ஈடுசெய்ய முடியாத சேதத்தைத் தடுக்க நாம் அவசரமாகச் செயல்படவேண்டும் என்பதை அறியப் போதுமான சான்றுகள் உள்ளன."
 
"ஆனால் பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் மேலும் ஈடுசெய்ய முடியாத சேதத்தைத் தடுக்க நாம் அவசரமாக செயல்பட வேண்டும் என்பதை அறிய போதுமான சான்றுகள் உள்ளன," என்று அவர் கூறினார்.
 
நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான ஹான்ஸ் பீட்டர் ஆர்ப், பல அறியப்படாத விஷயங்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால், பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்கெனவே இந்தப் பூமியின் அளவை மீறிவிட்டதாகவும் மனிதகுலத்திற்கு ஆபத்து என்பதால் இது அதைக் கடந்து அதிகரிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
 
அவர், "பிளாஸ்டிக் மாசுபாடு பூமியின் அளவை மீறி, பூமிக்கான அச்சுறுத்தலின் மூன்று அளவுகோல்களை நிரப்புகிறது என்று நானும் என் சகாக்களும் வாதிட்டோம். 1. பிளாஸ்டிக் வெளிப்பாடு அதிகரிப்பு, 2. உலகளாவிய் சுற்றுச்சூழல் அமைப்பில் மீளமுடியாத பிளாஸ்டிக்கின் இருப்பு, 3. அது ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான ஆதாரங்கள் மற்றும் பிளாஸ்டிக் வெளியேற்றத்தால், அந்தப் பாதிப்பு அதிகரித்தல்.
 
குவிப்பு மற்றும் மோசமாக மீளக்கூடிய பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலுக்கு, கழிவு மேலாண்மைக்கான சர்வதேச ஒருங்கிணைந்த உத்திகளுடன் விர்ஜின் பிளாஸ்டிக் (பாலிமர்களில் கலப்படம் இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்) பொருட்களின் நுகர்வுகளை விரைவாகக் குறைக்கவேண்டும், என்பதுதான் பகுத்தறிவு மிக்க பதிலாக இருக்கும்," என்று பிபிசியிடம் கூறினார்.
 
அதே பெரிய நிறுவனங்கள் கடுமையான உலகளாவிய விதிகளை எதிர்த்தாலும், மற்றவை ஆதரவாக உள்ளன. ஒரு குழு, plasticpollutiontreaty.org, பிளாஸ்டிக் வணிகத்திற்கான ஒரு சம நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக கடுமையான தரநிலைகளுக்குப் பதிவு செய்ய நிறுவனங்களை அழைக்கிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்