விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச நிபுணர்களுக்கு சுதந்திரம் தேவை

திங்கள், 21 ஜூலை 2014 (21:05 IST)
கிழக்கு உக்ரைனில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிக்கு சர்வதேச நிபுணர்கள் சென்று பணிகளை மேற்கொள்ள முழுமையான மற்றும் கட்டுப்பாடுகளற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சர்வதேச கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இந்த சம்பவம் சம்பந்தமான விசாரணைகளை நடத்துகின்ற பொறுப்பை நெதர்லாந்திடம் ஒப்படைக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக உக்ரைனியப் பிரதமர் அர்செனியு யத்சென்யுக் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைனிய பிரிவினைவாதிகளால்தான் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தான் நம்புவதாக அவர் மீண்டும் தெரிவித்தார்.

விசாரணையாளர்கள் அவ்விடத்தில் பணிகளை மேற்கொள்வதற்குரிய பாதுகாப்பு வழங்கபடுவது அவசியம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் விழுந்த சம்பவத்தை அரசியல் லாபத்துக்காக யாரும் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

குற்றவாளியே குற்றச் சம்பவ இடத்தைக் கட்டுப்படுத்துவதுபோல சம்பவ இடத்தில் நிலவும் சூழல் மோசமாக இருக்கிற என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்