ஓய்வு பெறும் மஹேல ஜெயவர்தனவின் ஆட்டமும் ஆளுமையும்

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (18:50 IST)
உலகின் முன்னணி கிரிக்கெட் வீரரான இலங்கையைச் சேர்ந்த மஹேல ஜெயவர்தன, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இளம் வீரர்களின் மரியாதை
 
பாகிஸ்தானுக்கு எதிராக 18.8.2014 அன்று கொழும்பில் முடிவடைந்த டெஸ்ட் போட்டியே அவர் கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டி.
 
டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றில் சுமார் 17 ஆண்டுகாலம் தனது ஆளுமையைச் செலுத்தியுள்ளார் மஹேல ஜெயவர்தன.
 
அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை என்பது 1997ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆரம்பமானது. அந்தப் போட்டி டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சாதனையை ஏற்படுத்திய ஒரு போட்டி.
 
இன்றளவும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிகப்படியான ஓட்டங்கள் பெறப்பட்டது அந்தப் போட்டியில்தான்.
 
அதில் இலங்கை தமது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 952 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது. அப்போட்டியில் இரு அணிகளும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே ஆடின. அதில் மஹேல ஜெயவர்தன 66 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். சனத் ஜெயசூரிய 340 ஓட்டங்களை எடுத்தார்.
 
இப்படி தனது 17 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல மைல்கல்களுடன் தொடர்புபட்டிருந்தார் மஹேல ஜெயவர்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்